மழையால் பாதிப்பு; ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்: PMK

ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2021, 01:55 PM IST
மழையால் பாதிப்பு; ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்: PMK title=

தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே நிவர், புரெவி புயல்களால் வயல்களில் தேங்கிய நீர் வடியாத நிலையில் இந்த மழை உழவர்களின் துயரங்களை அதிகரித்திருக்கிறது.

காவிரி (Kaveri) பாசன மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இம்முறை விளைச்சலும் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், நல்ல லாபம் கிடைக்கும் என்று உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், கடந்த மாதம் அடுத்தடுத்து  நிவர் மற்றும் புரெவி (Cyclone Burevi) புயல்களால் தொடர்மழை பெய்தது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் (Cuddalore) உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பல வகையான பயிர்கள் சேதமடைந்தன. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் முன்பே காவிரி பாசனப் பகுதிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. கடந்த மழைகளில் பாதிக்கப்படாமல் தப்பியிருந்த நெல் உள்ளிட்ட பயிர்களை இந்த புதிய மழை பாழாக்கியுள்ளது.

ALSO READ | மழையால் ஏற்பட்ட சாலைக்குழிகளை சீரமைக்க வேண்டும்: PMK

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டை அறிவித்து, அதற்கான  தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை முதல் செலுத்தப்படவுள்ளது. இத்தகைய சூழலில் புதிய மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா? என்ற கவலை விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் புதிய மழையால் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒருபுறமிருக்க, கடலூர் மாவட்டத்திலும், காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதிகளிலும் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக சம்பா பயிர்களை அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக சம்பா பயிர் அறுவடையின் போது வயல் உலர்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் எந்திரங்களை வயலில் இறக்கி அறுவடை செய்ய இயலும். ஆனால், நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் வயலில் தேங்கிய நீர் இன்னும் முழுமையாக வடியாததால், வயலில் 2 அடிக்கும் கூடுதலான ஆழத்திற்கு சேறு உருவாகியுள்ளது. நெற்பயிர்களும் அதிக ஈரப்பதம் காரணமாக வயலில் சாய்ந்துள்ளன. தலை சாய்ந்த நெற்பயிர்களை அடுத்த ஒரு சில நாட்களுக்குள் அறுவடை செய்யாவிட்டால், நெற்கதிர்கள் வயலில் கொட்டி முளைக்கத் தொடங்கும் வாய்ப்புள்ளது.

ALSO READ | Flood: பாதிப்புக்கு மத்திய அரசு ₹1000 கோடி நிதியுதவி கொடுக்கவேண்டும்- பா.ம.க

பல இடங்களில் உழவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவில் அறுவடை செய்தாலும் கூட, அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. ஓர் ஏக்கரில் குறைந்தது 20 குவிண்டால் முதல் 22 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால், மழை பாதிப்புகள் காரணமாக ஏக்கருக்கு 10 குவிண்டால் மட்டுமே விளைச்சல் கிடைத்திருப்பதாக உழவர்கள் கூறியுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லும் அதிக ஈரப்பதம் கொண்டதாக இருப்பதால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியவில்லை. அதனால், ஒரு குவிண்டால் நெல்லை ரூ. 1,300&க்கு  தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இது தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கொள்முதல் விலையில் மூன்றில் இரு பங்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.30,000 வரை செலவாகும். ஏக்கருக்கு 20 குவிண்டால் விளைச்சல் இருந்தால், ரூ.39,160 வருமானம் கிடைக்கும். அறுவடை - போக்குவரத்து செலவுகள் போக  ஏக்கருக்கு ரூ.6,000 வரை லாபம் கிடைக்கும். ஆனால், இப்போது மழை பாதிப்பு காரணமாக, கிடைத்த  10 குவிண்டால் நெல்லையும் ரூ.13,000 என்ற விலைக்கு விற்க வேண்டியிருப்பதால், இறுதி கட்ட செலவுகளையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.20,000 வரை இழப்பு ஏற்படும். இந்த இழப்பை உழவர்களால் தாங்க முடியாது.

தமிழ்நாட்டில் (Tamil Nadu Government) அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனாலும் உழவர்களின் நலன் கருதி இப்போது 20% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மேலும் தளர்த்தி, ஈரப்பத உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்றார்.

ALSO READ | நிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: PMK

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News