ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் SC இன்று தீர்ப்பு; தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மீண்டும் திறக்கப்படுமா? என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று, காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்குகிறது. 

Last Updated : Feb 18, 2019, 08:45 AM IST
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் SC இன்று தீர்ப்பு; தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!  title=

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மீண்டும் திறக்கப்படுமா? என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று, காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வழங்குகிறது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்கு இருக்கும் சூழலும் எதிர்மறையாக உள்ளதாக தமிழ்நாடு அரசு வாதிட்டிருக்கிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திடம் எடுத்துரைத்திருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பை கடுமையாக எதிர்த்து வாதிட்டார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு, அந்நிறுவனம் வாதிட்டுள்ளது.

அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று காலை சுமார் 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில், தூத்துக்குடியில், காவல்துறையின் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் மே 22 ஆம் தேதி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News