இன்று மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!!

அனைத்து டாஸ்மாக் மதுபான (Tasmac) கடைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 24, 2020, 06:12 AM IST
இன்று மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!! title=

சென்னை: நாட்டில் கோவிட் -19 பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக தமிழ் நாட்டில் லாக்-டவுன் அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான (Tasmac) கடைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுபான விற்பனை நிலையங்களை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே தமிழக அரசு உத்தரவுப்படி, மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்யும் அனைத்து பார்கள் மற்றும் கிளப்புகள் மார்ச் 17 முதல் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், "மக்கள் ஊரடங்கு உத்தரவு" (மார்ச் 22) அன்று தவிர, அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. 

இந்தநிலையில், தற்போது டாஸ்மாக் கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், தனிமைப்படுத்தல் அவசியம் என்பதால் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன:-

அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.

வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.

Trending News