கருவுற்ற மகளிருக்கு பணி நியமன மறுப்பு விதி நீக்கம் - மதுரை எம்.பி.யின் கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்

கருவுற்ற மகளிருக்கு பணி நியமனங்களை  மறுக்கிற விதி நீக்கப்படுவதாக  இந்தியன் வங்கி மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின்  கடிதத்திற்குப் பதிலளித்துள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : Jul 12, 2022, 07:13 PM IST
  • கருவுற்ற மகளிருக்கு பணி நியமன மறுப்பு விதி நீக்கம்
  • மதுரை எம்.பி.யின் கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்
  • இப்பிரச்சினை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ளுமாறு கடிதம்
கருவுற்ற மகளிருக்கு பணி நியமன மறுப்பு விதி நீக்கம் - மதுரை எம்.பி.யின் கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்  title=

இந்தியன் வங்கி அண்மையில் வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில் கருவுற்ற காலத்தில் மகளிருக்கு பணிமனங்கள் மறுக்கப்படுகிற அம்சம் இடம் பெற்று இருந்தது. 

" பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார் என்றும், பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல் நலத் தகுதி சான்று சமர்ப்பித்தால், மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவரது உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் விதி இருந்தது.

இந்த வழிகாட்டல் அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை எனவும், அது கைவிடப்பட வேண்டுமெனவும் இந்தியன் வங்கி தலைவர் சாந்திலால் ஜெயினுக்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடந்த ஜூன் 12 அன்று கடிதம் எழுதினார். 

மேலும் படிக்க | GST Update: வரி அதிகரிப்பால் விலை உயரப்போகும் ‘சில’ பொருட்கள்

இதற்கு ஜூன் 16 அன்று பதில் அளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் அஸ்வினி குமார், "சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்த அடிப்படையிலேயே பணியில் சேர கால அவகாசம் சிலருக்கு தரப்பட்டது" என்று பதில் அளித்திருந்தார். மேலும், 1987-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறையின் சுற்றறிக்கை ஒன்றையும் குறிப்பிட்டு இருந்தார். 

இதனைத் தொடர்ந்து, சு.வெங்கடேசன் மீண்டும் கடந்த ஜூன் 21-ம் தேதி இந்தியன் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதினார். சம்பந்தப்பட்ட மகளிர் ஊழியர்கள் வேண்டுகோளின் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் சில நேரங்களில் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்ற விளக்கத்திற்கும், பணி நியமன வழி காட்டல்களுக்கும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முரண் இருப்பதாக  அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதற்கு கடந்த 4-ம் தேதி பதிலளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் அஸ்வினி குமார்,  "எங்களது முந்தைய கடிதத்தில் இப்பிரச்சினை மறு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தோம். அதன்படி பரிசீலனை மேற்கொண்டு, இனி தவறான பொருள் கொள்தல் நிகழ்ந்து விடக் கூடாது என்று அந்த விதியை நீக்கி இருக்கிறோம்.

இதுவரை எந்த மகளிரும் இந்தியன் வங்கியில் பணி நியமனம் மறுக்கப்பட்டதில்லை என்றும் வங்கி பாலின பாரபட்ச நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தோடு இப் பிரச்சினை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு உளமார வேண்டுகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன்,  இந்தியன் வங்கிக்கு நன்றி. இந்திய நாட்டின் பெருமை மிக்க அரசு வங்கியான இந்தியன் வங்கியின்  பங்களிப்பு மீது  அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு. வங்கி மென்மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துக்கள். இந்தியன் வங்கியில் எட்டப்பட்டுள்ள தீர்வு பாலின பாரபட்ச நடைமுறைகளுக்கு எதிரான இன்னொரு முன்னோக்கிய நகர்வு எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: ஒரு ஆட்டோவில் 27 பயணிகள்; அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News