'ரூ.4,500 கோடி மோசடி?' உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு vs அமலாக்கத்துறை - நாளை தீர்ப்பு!

TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2023, 03:45 PM IST
  • மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
  • இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மனு.
  • இந்த மனு மீதான உத்தரவு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
'ரூ.4,500 கோடி மோசடி?' உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு vs அமலாக்கத்துறை - நாளை தீர்ப்பு! title=

TN Government ED Case: தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக  பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.  

இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

'அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது'

இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர்  மாவட்ட  ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் படிக்க | நாம் அடையாளம் காட்டுபவரை பிரதமராக்க முதலமைச்சர் ஸ்டாலின் யோசனை

இந்த மனு  நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, "சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது.

'உள்நோக்கம் உள்ளது'
 
சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கனிம வள குற்றங்கள் தொடர்பாக  மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அமலாக்கத் துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அமலாக்கத் துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது.

மேலும் படிக்க | சமூக நீதியின் அடிப்படை தெரியாமல் அவதூறு பரப்புவதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

4,500 கோடி ரூபாய் 

பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "இந்த வழக்கு  விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல்,  இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவரங்களை கேட்கப்பட்டது. அவை வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை விசாரணைக்கு உதவியாகத்தான் கேட்கப்பட்டது" என்றார்.

'மாநில அரசு விசாரிப்பதை தடுக்கவில்லை'

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "பிறகு எதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு உதவி செய்ய கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. சம்மன் அனுப்பியதில் உள்நோக்கம் இருக்கிறது. என்ன ஆதாரம் உள்ளது" எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், செயற் பொறியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் ஆதாரங்களை சேகரிப்பதற்கான விசாரணை தான் இது என்றார்.

மேலும் படிக்க | சென்னையில் வி.பி.சிங் சிலை... முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "தற்போது சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத குவாரி நடப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநில அரசு கூறியிருக்கிறது. மாநில அரசு விசாரிப்பதை தடுக்கவில்லை.  கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை. மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது. அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த விசாரணையை மாநில அரசு தடுக்க முடியாது" என்றார்.

'சம்பந்தப்பட்டவர்களை அரசு பாதுகாக்க முயற்சிக்கிறது'

குறுக்கிட்ட நீதிபதிகள், "அனைத்து குவாரிகளின் விவரங்களை  எப்படி கேட்க முடியும். சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ள வழக்குகளின் விவரங்களை மட்டும் கேட்கலாம். அந்த தகவல்களை தராவிட்டால் வழக்கு தொடரலாம்" என்றனர்.

இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "ஒரு யூனிட் மணல் விற்பதன் மூலம் 1900 ரூபாய் அரசுக்கு வருகிறது. ஆனால் 20 ஆயிரம் ரூபாய் வரை தனியாருக்கு செல்கிறது. இந்த விவரங்களை சேகரிக்க அதிகாரம் உள்ளது. சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் இல்லை என மாநில அரசு கூற முடியாது. இந்த சட்டவிரோத மணல் விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்து அமலாக்க துறை விசாரிக்க முடியும். தமிழகம் முழுவதும் உள்ள 28 குவாரிகளில் நடத்திய சோதனையில், 27.70 லட்சம் யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததன் மூலம், 4500 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது" என்றார்.

நாளைக்கு உத்தரவு

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தவே, "அரசு யாரையும் பாதுகாக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?" என்றார். தொடர்ந்து பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "அமலாக்கத் துறையிடம் சாட்சியம் அளித்த அரசு அதிகாரி, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றம் சாட்டப்படாத அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" என தெரிவித்தார்.

ஏராளமான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகள் உள்ளன. அவற்றை விசாரணை செய்ய வேண்டும், தேர்ந்தெடுத்து விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக தமிழக அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஏன் அமலாக்க துறைக்கு வழங்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினால், அந்த முதல் தகவல் அறிக்கைக்ளை வழங்க தயார் என துஷ்யந்த் தவே தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான உத்தரவை நாளைக்கு (நவ. 28) தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News