இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம் : உலகில் முதன்முதலாக சட்டம் இயற்றிய நாடு

Scotland : உலகிலேயே முதல் நாடாக ஸ்காட்லாந்தில் சானிடரி நாப்கின்கள் போன்ற மாதவிடாய் கால பொருட்களை இலவசமாக வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் என்ன சொல்கிறது, இந்தச் சட்டத்திற்கான தேவை ஏன் வந்தது என்பது குறித்து பார்ப்போம்.   

Written by - Chithira Rekha | Last Updated : Aug 17, 2022, 03:09 PM IST
  • இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம்
  • உலகின் முதல் நாடாக சட்டம் இயற்றிய ஸ்காட்லாந்து
  • அனைத்துத் தரப்பினரும் வரவேற்பு
 இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம் : உலகில் முதன்முதலாக சட்டம் இயற்றிய நாடு title=

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம், The Period Products (Free Provision) என்ற சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த திங்கட்கிழமையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம், மாதவிடாய் காலத்தில் தேவையான பொருட்களை வழங்குவது அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளிலும் இவை இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பாலினத்தவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்பது இதன் கூடுதல் அம்சமாகும். 

அதோடு மட்டுமால்லாமல் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது குறித்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கப்படும் எனவும் ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாதவிடாய் கால பொருட்கள் அருகில் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள Pick My Period என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Hey Girls என்ற தொண்டு நிறுவனம் இந்த செயலியைத் தொடங்கியுள்ளது. 

மேலும் படிக்க | இந்தியாவில் பஞ்சம் ஏற்படும்... பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே, ஸ்காட்லாந்தில் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை எளிதாகப் பெற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், மாணவர்களுக்கு சுகாதாரப் பொருட்களை வழங்க 6 புள்ளி 3 மில்லியன் டாலரும், இதன் தொடர்ச்சியாக, நூலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில், அவற்றை இலவசமாக வழங்க 4 புள்ளி எட்டு ஐந்து டாலரும் ஒதுக்கப்பட்டது. 

இவை அனைத்து திட்டங்களுக்குமான மூல நோக்கம், வறுமை காரணமாக சிறுமிகளும், பெண்களும் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை வாங்க இயலாத சூழல் இருக்கக் கூடாது என்பதே. உதாரணமாக, இந்தியாவில் இன்றும் கிராமங்களில் உள்ள பெண்கள், தங்கள் மாதவிடாய் காலங்களில், கந்தல் துணிகள், வைக்கோல், மணல் போன்ற பாதுகாப்பற்ற பொருட்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதிய அறிக்கையின்படி, வளரும் நாடுகளில் உள்ள பெண்கள், மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை வாங்க இயலாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கென்யாவில் உள்ள பள்ளி மாணவிகள், மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.  இந்த சூழலில் தான் ஸ்காட்லாந்து அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டம், இலவச பொருட்களை நாடும் நபர், அவை ஏன் தேவை, எவ்வளவு தேவை என்பது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கத் தேவையில்லை எனவும், ஒருவேளை அஞ்சல் மூலம் விநியோகிக்க நேர்ந்தால் அதற்கான தகவல் தவிர வேறு எவ்வித தகவலும் தரத் தேவையில்லை என்பதை உறுதி செய்துள்ளது. இச்சட்டத்தின் மூலம், மாதவிடாய் காலத்தை அனைவரும் சமமாக அணுக முடியும் எனவும், சமூகத்தில் இது குறித்த விவாதத்தை இயல்பாக்கும் எனவும் ஸ்காட்லாந்து அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், வேறு சில நாடுகளிலும் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை இலவசமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் வருகை குறைவதைத் தடுக்கும் வகையில், அனைத்துப் பள்ளிகளிலும் சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படுமென அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார். 

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா நகரங்களில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகளிலும் சானிடரி நாப்கின்கள் மற்றும் tampon-கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், பள்ளிகளில் மாதவிடாய் காலத்தில் தேவைப்படும் பொருட்களை இலவசமாக வழங்க கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெர்ஜீனியா, வாஷிங்டன் மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களும் சட்டம் இயற்றியுள்ளன. உலகிலேயே முதல்நாடாக கடந்த 2018-ம் ஆண்டு கென்யா, 
tampon-னுக்கான வரியை நீக்கியது. இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் இலவச சானிட்டரி பேட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மாதவிடாய் என்பது உடலில் ஏற்படும் சாதாரண நிகழ்வு தான் என்பதும், அதுகுறித்து பேசத் தயங்குவதோ, கூச்சப்படவோ தேவையில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும், இதன் காராணமாக பெண்களின் அன்றாட செயல்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையும் ஸ்காட்லாந்து மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும்.

மேலும் படிக்க | Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News