கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக: PMK

கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Sep 27, 2020, 11:19 AM IST
கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக: PMK title=

தமிழ்நாடு (Tamil Nadu)  உட்பட இந்தியா முழுவதும் பட்டப்படிப்பு இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வுகளை நடத்துவதில் நடந்த குழப்பங்களுக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மட்டும் 10,000 மாணவர்களின் உயர்கல்வி (Higher Education) கனவு கருகிவிடும்.

இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் பிற நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மழைக்கால பருவப் படிப்புகளில் சேர தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் பருவத் தேர்வு இல்லாமல், அதற்கு முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கிடைத்துள்ளது. அவர்கள் முதல் பருவத்திற்கான கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தி விட்டனர். அக்டோபர் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர்கள் இறுதிப் பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்காலிக பட்டச் சான்றிதழ்களை (Provisional Certificate) தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு விடும்.

 

ALSO READ | அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும்: PMK

அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் விசா உள்ளிட்டவற்றை பெறவும் தற்காலிக பட்டச் சான்றிதழ்கள் அவசியம் ஆகும். ஆனால், மாணவர் சேர்க்கை, விசா அனுமதி உள்ளிட்ட  அனைத்தும் சாத்தியமாகுமா? என்பது தெரியாமல் தமிழ்நாட்டு மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதிப் பருவத் தேர்வுகள் தொடங்கி விட்டன. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் இம்மாத இறுதிக்குள்ளாகவும், சில பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதத் தொடக்கத்திலும் இறுதிப்பருவத் தேர்வுகள் நிறைவடையவுள்ளன. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் அமையும்.

அக்டோபர் மாதம் 5-ஆம் தேதிக்குள் இறுதிப்பருவத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு, தற்காலிக பட்டச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினால் மட்டும் தான் அவர்களின் வெளிநாட்டு  உயர்கல்வி கனவு சாத்தியமாகும். இதை சாத்தியப்படுத்துவது கடினமானது அல்ல. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் தான் இறுதிப் பருவத்தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றின் முடிவுகளை ஒரு சில நிமிடங்களில் தொகுத்து பட்டியலிட்டு விடலாம். சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் விடைத்தாளில் தேர்வு எழுதும் முறையில் தேர்வை நடத்துகின்றன. அத்தேர்வுகளின் விடைத்தாள்களை விரைந்து திருத்தி முடிவுகளை அறிவிப்பது தான் சற்று சவாலான விஷயம் ஆகும்.

அந்தப் பல்கலைக்கழகங்களிலும் 90% மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகங்கள் நினைத்தால், விடைத்தாள்களைத்  திருத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்கி விடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வுகள் முடிந்த சில நாட்களில் முடிவுகளை அறிவித்து, அடுத்த சில நாட்களில் தற்காலிக பட்டச் சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் அனுப்பினால் கூட, மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிட முடியாதவையாகும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர்கள் நடப்பு பருவத்தில் சேரத் தவறினால் ஓராண்டு படிப்பை இழக்க நேரிடும்; மேலும் அடுத்த ஆண்டில் புதிதாக பட்டம் பெறுவோருக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இப்போது உயர்கல்வி கற்க வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு  அடுத்த ஆண்டு இந்த வாய்ப்பு மறுக்கப்படலாம். அதனால் அவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடக் கூடும்.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாடுகளின் வங்கிகளில் கணக்குத் தொடங்கி ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி வைப்பீடு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். இதற்கெல்லாம் மேலாக அனைத்து மாணவர்களும் முதல் பருவக் கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். இடம் கிடைத்த மாணவர்கள் குறித்த காலத்திற்குள் சேரவில்லை என்றால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாமல் போய்விடும். அதேபோல், உயர்கல்வி கற்பதற்காக Clarendon Scholarship of Oxford, Erasmus Mundus scholarship of  EU, Adelaide Scholarship of Australia  போன்ற கல்வி உதவித்தொகைகளை இழக்க நேரிடும். இதுபோன்ற இழப்புகளை பல ஏழை மாணவர்களின் குடும்பங்களால் தாங்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதிப் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்; தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க வேண்டும் என்றார்.

 

ALSO READ | மக்களின் உயிருக்கு உலை வைக்கும் குரோமிய ஆபத்தை போக்க வேண்டும்- PMK

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News