ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரோஹித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்கள்!!

விளையாட்டுத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவ விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 05:46 PM IST
  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து விளையாட்டு வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர்.
  • ரோஹித் இதுவரை 32 டெஸ்ட், 224 ஒருநாள் மற்றும் 108 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரோஹித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்கள்!! title=

விளையாட்டுத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவ விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்காக (Rajiv Gandhi Khel Ratna Award) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து விளையாட்டு வீரர்களில் ஒருவராக இந்தியாவின் ஒரு நாள் போட்டிகளின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கௌரவத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட மற்ற விளையாட்டு வீரர்கள், ஆசிய விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகாட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் மற்றும் பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு ஆகியோர்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது மற்றும் பிற தேசிய விளையாட்டு விருதுகளைப் பற்றி தீர்மானிக்க செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த நான்கு விளையாட்டு வீரர்களும் இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு கௌரவத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கேல் ரத்னா விருது, நான்கு ஆண்டு காலத்தில் ஒரு விளையாட்டு வீரரின் திறமையான வெளிப்பாடுகள் மற்றும் அவர் ஆற்றியுள்ள சாதனைகளுக்காக வழங்கப்படுகின்றது.  

தேர்வுக் குழுவின் கூட்டத்தில் இந்த ஆண்டு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுக்கான (Arjuna Award) விளையாட்டு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக், கபடி வீரர் தீபக் ஹூடா ஆகியோர் அடங்குவர்.

ALSO READ: தனது 19 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இந்த வீராங்கனை

அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியல்:

அதானு தாஸ் - வில்வித்தை

இஷாந்த் சர்மா - கிரிக்கெட்

தீபிகா தாக்கூர் - ஹாக்கி

தீபக் ஹூடா - கபடி

திவிஜ் சரண் - டென்னிஸ்

மீராபாய் - பளு தூக்குதல்

சாக்ஷி மாலிக் - மல்யுத்தம்

சிராக் வர்மா - பூப்பந்து

சத்விக் சைராஜ் - பூப்பந்து

கடந்த சில ஆண்டுகளில் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கும் ரோஹித், கேல் ரத்னா கௌரவத்தைப் பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ஆவார். சச்சின் டெண்டுல்கர் 1998 ஆம் ஆண்டில் இந்த விருதால் கௌரவிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் ஆவார். அதன்பின்னர் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, 2007 ல் கெல் ரத்னாவைப் பெற்றார்.

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி 2018 ஆம் ஆண்டில் இந்த மதிப்புமிக்க விருதை வென்றார்.

ரோஹித் கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மிகவும் நல்ல முறையில் விளையாடினார். 9 போட்டிகளில் 648 ரன்கள் எடுத்து அதிக அளவு ரன் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் வந்தார். இந்த போட்டிகளில் அவர் ஐந்து சதங்களையும் அடித்தார்.

அதிரடி பேட்டிங் பாணிக்காக அறியப்படும் ரோஹித், எந்த வித பந்துவீச்சையும் எதிர்த்து அடிக்கும் திறன் கொண்டவர். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை அடித்த உலகின் ஒரே பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார்.

உலகின் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோஹித் கருதப்படுகிறார்.

ரோஹித் இதுவரை சர்வதேச அளவில் 32 டெஸ்ட், 224 ஒருநாள் மற்றும் 108 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மூன்று வடிவங்களில் முறையே 2141, 9115 மற்றும் 2773 ரன்கள் குவித்துள்ளார்.

ALSO READ: தோனிக்கும் ரெய்னாவுக்கும் இடையிலான தனித்துவமான ஒற்றுமை!! முதலில் பூஜ்ஜியம்; பின்னர் ஓய்வு

Trending News