4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 2 மணி வரை 38.63% வாக்குகள் பதிவு

4வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 29, 2019, 03:01 PM IST
4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 2 மணி வரை 38.63% வாக்குகள் பதிவு title=

2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் 4வது கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன. ஒடிசாவில் எஞ்சிய 41 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் நேரடி பலப்பரீட்சை நடத்துகின்றன.

2 மணி வரை 72 தொகுதிகளில் 38.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்காளம் 52.37 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 34.42 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 44.90 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 43.44 சதவீதமும், மகாராஷ்டிராவில் 29.95 சதவீதமும், ஒடிசாவில் 35.79 சதவீதமும், ராஜஸ்தானில் 44.62 சதவீதமும், பீகாரில் 37.71 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 6.66 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

 

அமைதியாகவும், பாதுகாப்பாகவும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், எஸ்எஸ் அலுவாலியா, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ், நடிகை ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட 945 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.

இந்த 4-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது. இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும்.

Trending News