சமூக நீதி நாள்! பெரியாரின் தேவை என்ன?!

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளான இன்று தமிழக அரசின் சார்பில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2021, 09:05 AM IST
சமூக நீதி நாள்! பெரியாரின் தேவை என்ன?! title=

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரின் சமூக நீதிப் பார்வை குறித்து மறுவாசிப்புக்கான தேவை எழுந்துள்ளது. பெரியார் தனது எழுத்திலும் பேச்சிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவமும் அழுத்தமும் கொடுத்தவர். சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பிறகே, இந்திய அரசியல் வெளியில் சமூக நீதி என்ற வார்த்தைகள் பரவலாகப் புழங்க ஆரம்பித்தன. பிற்பட்டோர் நலன் குறித்த விவாதங்கள் அந்த வார்த்தையைத் தவிர்த்து முழுமை பெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சமூக நீதி என்பது இடஒதுக்கீட்டுக்குள் அடங்கிவிடுவதன்று. அது அனைவரையுமே உள்ளடக்கிய சமத்துவ நிலையை இலக்காகக் கொண்டது. அதன் முழுமையான பரிமாணத்தை நூறாண்டுகளுக்கு முன்பே தெளிவாக உணர்ந்திருந்தவர் பெரியார்.

periyar

சமூக நீதிக்கான குரலாக ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கிய ஆறு மாதங்களில் அவர் எழுதியது இது: ‘என்றைக்கிருந்தாலும் இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டுத்தானாக வேண்டும். அங்ஙனம் ஒன்றுபடுவதற்கு அவரவர்களுடைய குற்றங்குறைகளை எடுத்துக்கொள்ளப் பயந்துகொண்டு, மேற்பூச்சுக்கு மாத்திரம் பிராமணர்களிடம் அன்பர்களாய் நடந்து கொள்வதில் இரு சமூகத்தாருக்கும் ஒரு பிரயோஜனம் ஏற்படாது எனக் கருதியே, யாருடைய நிஷ்டூரம் ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலையில்லாமல், உண்மையை எடுத்துக்கூறி குற்றங்களைக் கீறி ஆற்றி திருத்தப்பாட்டடையச் செய்து இரு சமூகமும் உண்மையான சகோதர அன்பில் கட்டுப்பட்டு, நமது நாடு உண்மையான விடுதலை பெறவே உழைத்துவரப்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே குடிஅரசின் முதலாவது இதழ் தலையங்கத்தில் “மக்களுக்குள் தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்… அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்...” 

periyar

பெரியாருக்கும் சிலை மற்றும் நினைவு இல்லம் போன்று பெரியார் உலகம் அமைக்க திராவிட கழகம் முடிவெடுத்துள்ளது.  இது முழுக்க முழுக்க திராவிர் கழக சொந்த நிதியில் இருந்து உருவாக்கப்படுகிறது. அதுபோல் 133 அடி சிலை வைக்க  அரசு அனுமதி அளித்துள்ளது.  அதன்படி  திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க உள்ளதாக பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 18கிமீ தொலைவில் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிறுகனூர். இங்கு 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் ஒன்றை உருவாக்க இருப்பதாக திராவிட கழகத்தின் பெரியார் சுய மரியாதை அறிவித்துள்ளது.

அங்கு 40 அடி உயர பீடத்தில் 95 அடி உயரம் கொண்டுள்ள தந்தை பெரியாரின் வெண்கல சிலை ஒன்று அமைய உள்ளது. 133 அடி உயரத்தில் அமையும்  மிக உயரமான பெரியார் சிலையாக இது அமைகிறது. இங்கு பெரியாரின் வரலாற்றை விளக்கும் ஒளி - ஒலி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகு சிலை அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மிகப்பெரிய பூங்காவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  பெரியார் படிப்பகம், நூலகம், புத்தக விற்பனையகம் ஆகியவனவும் அங்கு அமைக்கப்பட உள்ளன. உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளான இன்று தமிழக அரசின் சார்பில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.  இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வில் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும் -  பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமும் அமையும்!

சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில்  உறுதி ஏற்கிறேன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News