அரியர்ஸ் தேர்வு: "மனித கடவுளுக்கு வந்த சோதனை" மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு?

மாணவர்கள் மத்தியில் உயர்ந்த தமிழக முதல்வரின் செல்வாக்கு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அமைச்சரின் மெத்தனபோக்கு தான் முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 8, 2020, 12:23 PM IST
  • தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் மாணவர்களும் "பாஸ்" என தமிழக அரசு அறிவித்தது.
  • தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்ச்சி முடிவை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு
  • தமிழக அரசின் முடிவுக்கு எதிராக AICTE எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியர்ஸ் தேர்வு: "மனித கடவுளுக்கு வந்த சோதனை" மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு? title=

சென்னை: கொரோனா நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழக அரசு மிகப்பெரிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு மற்றும் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் "பாஸ்" என தமிழக அரசு (TN Govt) அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) அவர்களுக்கு நன்றி தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்தனர். அதுமட்டுமில்லாமல், பல மாவட்டங்களில், அடுத்த தேர்தலில் "எங்கள் ஓட்டு தமிழக முதல்வருக்கே" என போஸ்டர்கள் அடுத்து ஒட்டப்பட்டன.

ஆனால் மாணவர்களின் இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. அதற்கு காரணம், தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்ச்சி முடிவை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு என தகவல் வெளியானது. அதாவது அரியர்ஸ் (Arrears Students) வைத்துள்ள மாணவர்களை தேர்ச்சியடைய செய்வது ஏற்புடையதல்ல எனவும், அதுக்குறித்து தமிழக அரசுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் தரப்பில்  கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.

ALSO READ |  அரியர்ஸ் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஏற்க மறுப்பு என தகவல்

அதே நேரத்தில், எந்த கடிதமும் வரவில்லை என மறுத்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (AICTE) தரப்பில் கடிதம் வந்திருந்தால், அதை வெளியிட வேண்டும். அதைவிட்டுவிட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் சொந்த கருத்தை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது கல்லூரி அரியர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசின் முடிவுக்கு எதிராக AICTE எழுதிய கடிதம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ALSO READ |  "மனித கடவுளே எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்" தலைநகரத்தில் தெறிக்கவிடும் மாணவர்கள்

AICTE தரப்பில் கடிதம் எழுதவில்லை என உயர்கல்வித்துறை மைச்சர் கே.பி. அன்பழகன் (K. P. Anbalagan) கூறக்காரணம் என்ன? அமைச்சர் ஏன் மாணவர்கள் விவகாரத்தில் பொய் சொல்லனும்? இந்த கடிதத்தை ஏன் அமைச்சர் மறைத்தார்? ஒருவேளை இந்த கடிதம் குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகத்திடம் பேசியிருந்தால், இந்த விவகாரத்தை நல்ல முறையில் கையாண்டு இருக்கலாம். ஆனால் அமைச்சர் அன்பழகனின் அவசரத்தால், தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் மத்தியில் உயர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) செல்வாக்கு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அமைச்சரின் மெத்தனபோக்கு தான் முதல்வருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரத்தை தமிழக அரசு எப்படி சமாளிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்போம்.

Trending News