ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதற்க்கான சதி தான் ரூ. 72 ஆயிரம் வாக்குறுதி: பிரதமர் மோடி

ஆண்டுதோறும் ரூ. 72 ஆயிரம் என்ற காங்கிரசின் வாக்குறுதி என்பது ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதற்க்கான சதி தான் தவிர, அவர்களுக்கு ஏழைகளின் மீது அக்கரை இல்லை என பிரதமர் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2019, 04:14 PM IST
ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதற்க்கான சதி தான் ரூ. 72 ஆயிரம் வாக்குறுதி: பிரதமர் மோடி title=

இன்று பிரதமர் மோடி ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்பொழுது காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். 

ஒடிசா மாநிலம் காளஹந்தி மாவட்டத்தின் பவானிபடா நகரில் அமைந்துள்ள கிருஷ்ணா நகர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

அவர் கூறியதாவது: நான் ஒடிசா மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் ஓட்டு எங்களுக்கு அளிக்கவும். அப்பொழுது தான் 2017ல் உத்தரபிரதேசத்திலும் 2018ல் திரிபுராவிலும் வெற்றி பெற்று சாதனை செய்தது போல ஒரிசாவிலும் வரலாற்று சாதனை செய்வோம் எனக் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.

மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதிலும், நான் உங்களுக்காக வேலை செய்தேன். இந்த ஜனவரி ஒடிசா மாநில மக்களின் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களை தொடங்கி வைத்தேன்.

நாட்டில் நேர்மையான மாற்றமும், ஏழைகளுக்கு வெளிச்சமும், அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் உங்கள் வாக்களிப்பில் இருந்து தான் வந்துள்ளது. இந்த மோடியால் அல்ல.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்பு, மாநிலத்தில் 3000 கிராமங்களில் 24 லட்சம் வீடுகள் முதன்முறையாக இலவச மின் இணைப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒடிசா மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதிலும் மக்களுக்கு உதவ சிறப்பான நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்துள்ளது.

40 லட்சம் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி 40 லட்சம் மக்களுக்கு வங்கி கணக்குகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். 50 லட்சம் வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏழைகளை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றன. அவரைகளை ஏழைகளாகவே வைத்திருக்கவே இரண்டு கட்சிகளும் விரும்புகின்றன. 

ஆண்டுதோறும் ரூ. 72 ஆயிரம் என்ற காங்கிரசின் வாக்குறுதி என்பது ஏழைகளை ஏழைகளாக வைத்திருப்பதற்க்கான சதி தான் தவிர, அவர்களுக்கு ஏழைகளின் மீது அக்கரை இல்லை. 

இவ்வாறு மோடி கூறினார்.

Trending News