மனிதர்களுக்கும் மட்டுமல்ல, கொரில்லாக்களுக்கும் ஆபத்தாகிறதா Corona?

கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்ட  இரண்டு கொரில்லாக்களுக்கும் (gorillas) கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது. அதன் பிறகு விலங்குகளுக்கு COVID-19 பரிசோதனைகளை செய்யலாம் என சுகாதார நிபுணர்கள் முடிவு செய்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 12, 2021, 08:55 PM IST
  • கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்ட இரண்டு கொரில்லாக்களுக்கும் (gorillas) கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது.
  • அதன் பிறகு விலங்குகளுக்கு COVID-19 பரிசோதனைகளை செய்யலாம் என சுகாதார நிபுணர்கள் முடிவு செய்தனர்.
  • மிருகக்காட்சிசாலையின் பணியாளருக்கு அறிகுறியற்ற (asymptomatic) கொரோனா இருந்தது.
மனிதர்களுக்கும் மட்டுமல்ல, கொரில்லாக்களுக்கும் ஆபத்தாகிறதா Corona? title=

கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து, தற்போதுதான் தடுப்பு மருந்து கிடைத்துள்ளது. அப்பாடா என்று மூச்சு விடுவதற்குள் விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தெரியவந்து, கவலைகளை அதிகரித்துள்ளது.

கலிபோர்னியாவின் சான் டியாகோ உயிரியல் பூங்காவில் (California's San Diego Zoo) குறைந்தது இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக   மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்றாவதாக ஒரு கொரில்லாவுக்கும் கொரோனா அறிகுறிகள் (symptoms) இருப்பதாக அஞ்சப்படுகிறது.

கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்ட  இரண்டு கொரில்லாக்களுக்கும் (gorillas) கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்தது. அதன் பிறகு விலங்குகளுக்கு COVID-19 பரிசோதனைகளை செய்யலாம் என சுகாதார நிபுணர்கள் முடிவு செய்தனர். பெரிய குரங்குகளில் (apes) இயற்கை பரிமாற்றம் காணப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிருகக்காட்சிசாலையின் பணியாளருக்கு அறிகுறியற்ற (asymptomatic) கொரோனா இருந்தது. எனவே அவரிடமிருந்து இரண்டு விலங்குகளும் நோய் தொற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தை மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

ALSO READ | முதல் கட்ட தடுப்பூசி போடும் பணிக்காக தமிழகம் வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி

தற்போது, கொரில்லாக்கள் இயல்பாகவே இருப்பதாகவும், அவற்றுக்கு ஒருசில அறிகுறிகள்  மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. "சளி மற்றும் இருமல் தான் கொரில்லாக்களுக்கு இருக்கிறது, வேறு எந்த பிரசசனையும் இல்லாமல் வழக்கம் போலவே செயல்படுகின்றன" என்று மிருகக்காட்சிசாலையின் நிர்வாக இயக்குனர் லிசா பீட்டர்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "விலங்குகள் இரண்டும் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன, அவை நோயில் இருந்து முழுமையாக மீண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு கொரில்லாக்களுக்கு (gorillas) மட்டுமே இதுவரை கொரோனா பரிசோதனை செய்துள்ள நிலையில், மூன்றாவதாக ஒரு கொரில்லாவுக்கும் கொரோனா வைரஸ் (coronavirus) அறிகுறிகள் இருப்பதாகவும், அதற்கும் விரைவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கொரில்லாக்கள் அல்லது மிருகக்காட்சிசாலையின் பணியாளரிடம் இருந்து வேறு யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், தெற்கு கலிபோர்னியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து டிசம்பர் தொடக்கத்தில் இருந்து சான் டியாகோ உயிரியல் பூங்கா சஃபாரி பூங்கா (The San Diego Zoo Safari Park) மூடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

கொரில்லாக்களுக்கு அருகில் செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் முகக்கவசங்கள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியது அவசியம் என்று மிருகக்காட்சிசாலை அறிவுறுத்தியுள்ளது.  

கொரில்லாக்களின் டி.என்.ஏவும், (DNA) மனிதர்களின் மரபணுவும் 98 சதவீதம் வரை ஒத்துப் போகின்றன. அதுமட்டுமல்ல, சில மனிதர்களின் DNA உடன் ஒத்துப் போகாத விலங்கினங்களுக்கும் COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது கொரோனாவின் எல்லை அதிகரிக்கும் அறிகுறிகளா என்ற அச்சம் விஞ்ஞானிகளிடையே ஏற்பட்டுள்ளது.

ALSO READ | விரைவில் இந்தியாவிற்கு மேலும் 4 தடுப்பூசிகள் கிடைக்கும்: சுகாதார அமைச்சகம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News