விதி 110 கீழ் ஜெ., அறிவித்த திட்டங்கள் நிறைவேறும்: முதல்வர்

Last Updated : Jun 15, 2017, 02:35 PM IST
விதி 110 கீழ் ஜெ., அறிவித்த திட்டங்கள் நிறைவேறும்: முதல்வர் title=

சட்டசபையில் இன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசினார்.

அப்போது கல்வித்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி ரூ.4,503 கோடி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பலவேறு துறைகளின் சார்பில் மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடி தரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வற்புறுத்தி உள்ளோம். விரைவில் கிடைக்கும். என்றார்.

2011-12 முதல் 2015-16 முடிய 5 ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

315 அறிவிப்புகளுக்கான திட்டப்பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. இதில் 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் முன்னேற்றம் இல்லாமல் நிலுவையில் இருக்கின்றன. 

2016-17-ம் ஆண்டு சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ்  முதலமைச்சர் அவர்கள் 175 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். 167 அரசாணைகள் வெளியிடப்பட்டு, அப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு, 20 பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 147 பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 

8 அறிவிப்புகளுக்கான திட்டப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிப்பிற்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.

110  விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து அந்தந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் கேட்டால் விளக்கம் அளிக்க தயார். விதி 110 கீழ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News