CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்..தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 11, 2022, 12:57 PM IST
  • CUET நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு
  • தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
  • பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு
CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்..தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம் title=

இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. Common University Entrance Test (CUET) என்ற இந்த தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன் மொழிந்தார். தீர்மானத்தின் மீது பேசிய அவர், மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் 2022-23-ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களும் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என பீடிகை போட்டு பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளதெனக் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | மானிய கோரிக்கை விவாதத்திற்காக மே 10 வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர்

பிளஸ் 2 மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது ஏற்புடையது அல்ல எனவும், இது அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பினை வழங்காது எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். நீட் தேர்வைப் போன்று இந்த தேர்விற்கும் மாணவர்கள் பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படும் எனவும்,  பயிற்சி மையங்கள் புற்றீசல் போல வளர மட்டுமே நுழைவுத் தேர்வு சாதகமாக அமையும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.  

எனவே, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக்குழு பொது நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும் எனவும், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வில் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என யுஜிசி அறிக்கையில் உள்ளதாகவும், நீட் தேர்வும் இதே போன்று விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நுழைவுத்தேர்வை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் என பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ‘எம்.பில்’ பட்டம் நீக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News