காங்கிரேஜ் மாடுகள் ஒரு புதையல்... மகள் பாசத்தில் பால் பண்ணை வைத்த பட்டதாரி தந்தை - ஒரு வெற்றி கதை!

Coimbatore Kankrej Cattle Farm: மகளுக்கு நல்ல பால் வேண்டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், நாட்டு மாடு வாங்கி வளர்த்து, பின் அதையே தனக்கான தொழிலாக மாற்றி பண்ணை வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2023, 07:46 PM IST
  • காங்கிரேஜ் வகை மாடுகள் 10 முதல் 12 லிட்டர் பால் வரை சுரக்கும்.
  • இது ஜல்லிக்கட்டு காளை போல கம்பீரமாக இருக்கும்.
  • எந்த கலப்படமும் இல்லாத, சத்தான பாலை பெறுகிறோம்.
காங்கிரேஜ் மாடுகள் ஒரு புதையல்... மகள் பாசத்தில் பால் பண்ணை வைத்த பட்டதாரி தந்தை - ஒரு வெற்றி கதை! title=

Coimbatore Kankrej Cattle Farm: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஆஸ்திரேலியாவில் சிவில் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தனது மகளுக்கு சத்தான ஆரோக்கியமான மாட்டுப்பால் கொடுப்பதற்காக மாடுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கியதாக கூறும் ராஜேஷ் கார்த்திக், பின்னாளில் அதையே தனக்கான தொழிலாக மாற்றிக் கொண்டு 80க்கும் மேற்பட்ட காங்கிரேஜ் மற்றும் கீர் இன மாடுகளை வளர்த்து லாபம் ஈட்டி வரும் தன் வெற்றிக்கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தேடலில் கிடைத்த புதையல்

இதுகுறித்து அவர் கூறுகையில்,"மகளுக்கு சத்தான பால் கொடுக்கும் முயற்சியில் அதற்கான தேடலில் இறங்கிய போது சமூக வலைத்தளங்களில், பால் சம்பந்தமான நிறைய தகவல்கள் பகிரப்பட்டு வருவதை பார்த்தேன். பாக்கெட் பால்களில் சுவையில்லை, முழுமையான சத்தில்லை. அப்படி இப்படி என நிறைய கருத்துகளை கடந்து செல்கிறோம். இவை அனைத்தும் உண்டாக்கிய தாக்கம்தான், என்னை சொந்த தேவைக்காக மாடு வளர்க்கும் ஆசையை தூண்டிவிட்டது. மாடு வளர்க்க ஆசைப்பட்டதும், மிகப்பெரிய தேடலில் இறங்கினேன்.

வெளிநாட்டு மாட்டு இனங்களை தாண்டி, நாட்டு மாடுகளில் எவை அதிக அளவில் பால் கொடுக்கும், எந்த மாட்டு வகையின் பால் சுவையாக மற்றும் ஆரோக்கியமானதாக இருக்கும் என நிறைய விஷயங்களை முன்வைத்து, அதற்கான பதிலை தேடினேன். அதற்கு காங்கிரேஜ் வகை மாடுகள்தான் சிறப்பான பதிலாக அமைந்தது. அதனால்தான் அவற்றை  வளர்க்க ஆரம்பித்தேன்.

ஏன் காங்கிரேஜ் இன மாடு?

இது இந்திய நாட்டு மாடுகள் இனத்தை சேர்ந்தது. குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. இவை பார்ப்பதற்கு, மிகவும் கம்பீரமாக இருக்கும். மிகப்பெரிய கொம்புகள் இருக்கும். இதை நம் முன்னோர்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து, பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்கள். அந்தளவிற்கு தொன்மை வாய்ந்தது காங்கிரேஜ் இன மாடுகள். சுவையான அதேசமயம் சத்து நிறைந்த பால்தான், இதன் மிக முக்கிய சிறப்பு. 

மேலும் படிக்க | ஆனந்த் மஹிந்திராவின் சொத்து மதிப்பு, கார்கள் பற்றிய முழு விவரங்கள்!

இந்திய நாட்டு வகை மாடுகளிலேயே, இதன் பால் தனிச்சுவையாக இருக்கும். இந்த கருத்தை செவி மூலமாக கேட்டு தெரிந்து கொள்வதைவிட, நாவின் மூலமாக சுவை உணர்ந்து கொள்வதுதான் சிறப்பானதாக இருக்கும். மேலும், இந்த வகை மாடுகள், அதிகளவிலான பாலை உற்பத்தி செய்யும். நம் ஊர் நாட்டு மாடுகள், ஒருநாளில் அதிகபட்சமாக 3 முதல் 5 லிட்டர் பால் சுரக்கும் என்றால், காங்கிரேஜ் வகை மாடுகள் 10 முதல் 12 லிட்டர் பால் வரை சுரக்கும். 

செலவும் மிக குறைவு

அதேபோல, காங்கிரேஜ் மாடுகளின் பால் உற்பத்தி காலமும் அதிகம். கன்று ஈன்றதில் இருந்து கிட்டத்தட்ட 9 மாதங்கள் வரை பால் கிடைக்கும். இதன் பாலில், கெட்ட கொழுப்புகள் மிக குறைவு. அதேசமயம் நல்ல கொழுப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மேலும் வெளிநாட்டு மாடுகளை விட, இதை வெகு சுலபமாக பராமரித்துவிட முடியும். மருத்துவ செலவும் மிக குறைவு. மற்ற மாடுகளை போல, அடிக்கடி மருத்துவரை அழைத்து பராமரிக்கவேண்டிய தேவை இருக்காது. 

இவை பார்ப்பதற்கு ஜல்லிக்கட்டு காளை போல கம்பீரமாக இருப்பதால், காங்கிரேஜ் மாடுகளை வளர்க்கவும், பராமரிக்கவும் தமிழக மக்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள். குறிப்பாக, இந்த மாட்டு இனங்களின் கொம்புகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். இப்போது தமிழ்நாட்டில், தென்படும் மாடுகளின் கொம்புகளைவிட குஜராத் மாநிலங்களில் வளரும் மாடுகளின் கொம்புகள், பிரமிக்க தக்கதாக இருக்கும். 

கள ஆய்வு 

ஜல்லிக்கட்டு காளை போல இவை நம்மை மிரளச் செய்தாலும், உண்மையில் இவை மிகவும் சாதுவானவை. புதிய நபர்களை அருகில் அனுமதிக்காது. ஆனால் நன்கு பழக்கமானவர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாது. பாசமாக பழகக்கூடியது.  காங்கிரேஜ் பற்றி அறிந்து கொண்டதும், அதை வளர்க்க ஆசைப்பட்டேன்.

அதற்காகவே, குஜராத் மாநிலம் சென்று அங்கு சில மாதங்கள் தங்கி இருந்து காங்கிரேஜ் மாடுகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். காங்கிரேஜ் மாடுகள் வளர்ப்பவர்களிடம் அதுபற்றி முழுமையாக கற்றுக்கொண்டேன். அதை எப்படி வளர்ப்பது, எப்படி கையாள்வது, எத்தகைய உணவுகளை உண்ண கொடுப்பது, நோய் பாதிப்பினால் சுணங்கினால் எப்படி குணமாக்குவது... இப்படி நிறைய கள ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான், தைரியமாக மாடுகளை வாங்கி வளர்த்தேன்.

ஹோம் மேட்

இன்று பெரும்பாலான பெற்றோர், காய்கறிகள் தொடங்கி இறைச்சி வரை எல்லாவற்றிலும் 'ஆர்கானிக்' பொருட்களை விரும்புகிறார்கள். அதுவும், அவர்களது வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கோழிகளையே மன திருப்தியோடு குழந்தைகளுக்கு பரிமாறுகிறார்கள். அந்தவகையில், இதுவும் அதுபோன்ற 'ஹோம்மேட்' முயற்சிதான். எனக்கும், அப்படியொரு திருப்தி உண்டு. 

எந்த கலப்படமும் இல்லாத, சத்தான பாலை குடிக்க கொடுக்கிறோம் என்ற மனநிம்மதி உண்டு. இப்போது மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், என்னுடைய மகள் மட்டுமின்றி அக்கம் பக்கத்தில் இருக்கும் நிறைய குழந்தைகளும் இந்த பாலை பருகுகிறார்கள். இதன் சுவையை எல்லோரும் உணரும் விதமாக, டீ, காபி போன்றவற்றை தயாரித்து கொடுப்பது உண்டு. என்னை போலவே சிந்தனை கொண்ட பலரும், காங்கிரேஜ் மாடுகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். 

தொழிலாக முன்னெடுக்கலாம்

அவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்களை கொடுப்பதுடன், நிறைய இளைஞர்களுக்கு இதை தொழில் முயற்சியாக முன்னெடுக்கவும் வழிகாட்டி இருக்கிறேன். காங்கிரேஜ் மாடு வளர்ப்பு லாபகரமான முயற்சியாக நிச்சயமாக இருக்கும். மத்திய அரசு நாட்டு மாடுகளின் இனவிருத்தியை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதை தொழில் முயற்சியாக முன்னெடுப்பவர்களுக்கு, மானிய உதவிகளையும் வழங்குகிறது. அதனால், மாடு வளர்க்க ஆசைப்படுபவர்கள் அதை தொழிலாகவே முன்னெடுக்கலாம். பால் உற்பத்தி மட்டுமின்றி, பால் சம்பந்தப்பட்ட மற்ற இதர பொருட்கள் தயாரிப்பும், இதை மேலும் லாபகரமானதாக மாற்றும். 

வருமானமும் மன நிறைவும்

மகளின் தேவைக்காக மாடுகளை வளர்க்கத் தொடங்கிய நான் சொந்த ஊரிலிருந்து, கோவை புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்தேன். அங்கு பண்ணையை உருவாக்கி, சுத்தமான நாட்டு மாட்டுப்பால் மற்றும் பாலில் இருந்து உருவாக்கப்படும் மதிப்பு கூட்டு பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். சுத்தமான நாட்டு மாட்டு பாலில், டீ, காபி, ரோஸ் மில்க் உள்ளிட்ட பானங்களையும் தயாரித்து பேக்கரியில் விற்பனை செய்து வருகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மாட்டுப் பண்ணை மூலம் நல்ல வருவாயுடன், மன நிறைவும் கிடைக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு இரண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மோடி அரசு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News