மகப்பேறு பயம், கருவைக் கலைத்த பெண் பலி, சென்னையில் பரிதாப சம்பவம்

கருவை கலைக்க தவறான முடிவெடுத்த தாய்! உயிர் இழந்த சிசு வெளியேறாமல் தாயின் வயிற்றிலேயே தங்கியதால் தாயும் பலியான சோகம்!! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பரிதாப சம்பவம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 02:07 PM IST
மகப்பேறு பயம், கருவைக் கலைத்த பெண் பலி, சென்னையில் பரிதாப சம்பவம் title=

சென்னை: சென்னை கொரட்டூரில் நடந்த ஒரு கருகலைப்பு முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. கொரட்டூரில், ஒரிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்கு பயந்து ஏழு மாத கருவை கலைப்பதற்காக நாட்டு மருந்தை சாப்பிட்டதால் பரிதாபமாக இறந்தார்.

கொரட்டூரில் உள்ள பாரதி நகர் பகுதியில் பிரதாப் உள்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒடிசாவை சேர்ந்தவர். தனது மனைவி குமாரி கஞ்சக்கா (வயது 23) உடன் கொரட்டூரில் தங்கி இருந்த இவர், கட்டிட வேலை செய்து வருகிறார். 

குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டதாக அவர்களுக்கு தகவல் வந்தது. குமாரியின் அண்ணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா, குமாரி கஞ்சக்கா இருவரும் ஒடிசா சென்றனர். 

ஒடிசாவில் இறுதி சடங்கில் பங்கேற்ற குமாரியிடம், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், கர்ப்பத்தில் கர்ப்பிணிகள் (Pregnancy) இறப்பது குறித்தும் அவருடைய உறவினர்கள் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கர்ப்பிணியாக இருந்த குமாரிக்கு, தானும் குழந்தை பிறக்கும் போது இறந்து விடுவோமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. இதையடுத்து, குமாரி தனது வயிற்றில் வளர்ந்து வந்த 4 மாத சிசுவை கலைக்க முடிவு செய்தார். 

எனினும், இது குறித்து குமாரி தனது கணவரிடம் எதையும் குறிப்பிடவில்லை. தனது தோழியிடம் தனது அச்சத்தை வெளிப்படுத்திய குமாரி, அவரிடம் உதவி கேட்டுள்ளார். அவரது தோழியும் கருகலைப்புக்கு ஒரு வழியை கூறியுள்ளார். அதன்படி, குமாரி, அவருடைய சொந்த ஊரில் உள்ள ஒரு நபரிடம் சென்று கருகலைப்புக்கான நாட்டு மருத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். 

எனினும், தான் கருக்கலைப்பு செய்ய நாட்டுமருந்து சாப்பிட்டதைப் பற்றி அவர் யாரிடமும் எதுவும் சொல்லாமலேயே இருந்துள்ளார். கருக்கலைப்புக்கான மருந்து சாப்பிட்டது முதல், குமாரியின் உடல் நிலை அவ்வப்போது மோசமானது. ஆனால், அவர் அதற்கான சிகிச்சை எதையும் எடுக்கவில்லை. 

ALSO READ: Health News: கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள், பானங்கள்

இந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக, குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததோடு, அவரால் சிறுநீரும் கழிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. 

உடல்நிலை மோசமான பின்னர்தான், தான் கருக்கலைப்புக்காக நாட்டுமருந்தை உட்கொண்ட விஷயத்தை குமாரி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குமாரியை பரிசோதித்து மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர். 

இதையடுத்து குமாரியின்  உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால், அவர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். எனினும், சில நாட்களிலேயே குமாரியின் உடல்நிலை மீண்டும் மோசமானது. 

இந்த நிலையில், ஒருசில தினங்களுக்கு முன்பு  குமாரியின் கணவர் பணியில் இருந்த வேளையில், வீட்டில் இருந்த குமாரி மயங்கி விழுந்துள்ளார். இதை கணவருக்கு தெரியப்படுத்திய வீட்டு உரிமையாளர் உடனடியாக வந்து குமாரியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பதறிப்போன பிரதாப் உடனடியாக வீட்டிற்கு வந்து, தனது மனைவியை வாகனம் மூலம் கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

மருத்துவமனையில், டாக்டர்கள் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், மேலும் அவருடைய கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, சீழ் பிடித்து மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். குமாரி அபாயகட்டத்தில் இருப்பதால், உடனடியாக அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

குமாரியின் கணவர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதையடுத்து மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. குமாரி பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதுகுறித்து குமாரியின் சகோதரி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் உள்காவிடம் விசாரணை நடத்தினர். 

கர்ப்பிணியான குமாரி கருகலைப்புக்கான நாட்டுமருந்தை வாங்கி சாப்பிட்ட சில நாட்களிலேயே வயிற்றில் இருந்த அவரது சிசு இறந்து விட்டதாகவும், இறந்த சிசு வெளியேறாமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயிற்றிலேயே இருந்ததால், கர்ப்பபையில் சீழ் வைத்து இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து, குமாரியின் கணவர் பிரதாப்பிடம் மாவட்ட குடும்பநல இணை இயக்குனர் டாக்டர் அமுதா தலைமையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

உறவினர்களின் தவறான அறிவுறுத்தல்களால் அச்சமுற்ற குமாரி, யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தவறான முடிவு எடுத்து தன்னையும் தன்னுடைய வயிற்றில் வளர்ந்து வந்த சிசுவையும் மாய்த்து  கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

இது போன்ற செயல்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் காவல் துறையினர் (Police Department) கேட்டுக்கொண்டனர். விஷயம் அறியாதவர்கள் செய்யும் அறிவுறைகளை ஏற்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், எந்தவித முடிவு எடுப்பதற்கு முன்பும் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது மிக முக்கியம் என்றும் காவல் துறை மேலும் அறிவுறுத்தியுள்ளது. 

ALSO READ: பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News