கோவையில் ஐடி ரெய்டு... மருத்துவமனை ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் - பின்னணி என்ன?

Coimbatore IT Raid News: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 6, 2024, 04:51 PM IST
  • இதுகுறித்து தேர்தல் ஆணையமும் விசாரணையை தொடங்கியிருக்கிறது
  • இருப்பினும், பிடிப்பட்ட தொகை குறித்த விவரம் வெளியாகவில்லை
  • அந்த பல கோடி ரூபாய் எதன் மூலம் பெறப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை
கோவையில் ஐடி ரெய்டு... மருத்துவமனை ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் - பின்னணி என்ன? title=

Coimbatore Income Tax Department Raid News: தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்றே கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டப்பேரை தொகுதிக்குமான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் வந்த வண்ணம் இருக்கின்றன. தகவல்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களில் சென்னை, தென்காசி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 
வருமான வரித்துறை அதிரடி சோதனை

பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறையினர் மீண்டும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த வகையில், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித்துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனார்.

மேலும் படிக்க | 100 சதவீத வாக்குப்பதிவு: மலையேற்றம், மனித சங்கிலி....பொதுமக்களை கவர்ந்த நூதன விழிப்புணர்வு முறைகள்

கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூா் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை மற்றும் அந்த மருத்துவமனை நிர்வாகம் நடத்தி வரும் நர்சிங் கல்லூரி ஆகிய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை (ஏப். 3) திடீா் சோதனை மேற்கொண்டனா். மேலும் அதன் உரிமையாளரிடம் நேரடி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரின் வீட்டிலும் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

ரகசிய அறையில் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய்...

மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 17 மணி நேர சோதனைக்கு பின் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களுடன் புறப்பட்டு சென்றதாகவும் இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த மருத்துவமனையின் நர்சிங் கல்லூரி தற்போது முடங்கியிருப்பதாகவும், செயல்படாத அந்த கட்டடத்தின் ரகசிய அறையில் இருந்துதான் இந்த ஆவணங்களும், பல கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

மக்களவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக அந்த மருத்துவமனைக்குச் சொந்தமான ரகசிய இடங்களில் பல கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

தகவல் அளிக்கவில்லை...

எனினும் இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எவ்வளவு என்பது குறித்து வருமான வரித்துறையோ அல்லது தேர்தல் ஆணையமோ எந்த விபரங்களையும்  வெளியிடவில்லை. இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் கேட்டபோது , வருமான வரித் துறை அதிகாரிகள் வந்து சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்திச் சென்றதாகவும், வேறு எந்தத் தகவலும் இல்லை எனவும் கூறினா். அதேபோல, இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது எந்தத் தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

கோவையில் பரபரப்பு

கோவை தொகுதியில் இம்முறை திமுக, பாஜக, அதிமுக ஆகியவை நேரடியாக மோதுகின்றன. திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே, இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. அதிக கவனம் பெறும் தொகுதியாக கோவை மாறியுள்ள நிலையில், அங்கு பல கோடி ரூபாய் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

மேலும் படிக்க | பொள்ளாச்சியில் இஸ்லாமியர் போல் வேடம் அணிந்து வாக்கு கேட்ட அதிமுக ஜெயராமன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News