புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும் - ராமதாஸ்

Last Updated : Jun 19, 2017, 01:07 PM IST
புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும் - ராமதாஸ் title=

தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டிகொண்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொது மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒடுக்குமுறை கையாளும் தமிழக அரசின் அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 38 மணல் குவாரிகளில் பெரும்பாலானவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியானதைத் தொடர்ந்து அவை சில வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன. மூடப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் தவிர புதிதாக 70 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தி ருக்கிறது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க புதிய மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சரும் அறிவித்துள்ள நிலையில், புதிய மணல் குவாரிகள் அமைக்கப் படவுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அரசின் முடிவுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.

உதாரணமாக நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் காவிரி ஆற்றில் மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கு எதிராக அப்பகுதி மக்களும், உழவர்களும் மணல் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை ஒடுக்க நினைத்த அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது.

நாகை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கரூர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மணல் குவாரிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களை தனிப்பட்ட முறையில் அச்சுறுத்துவது, பொய்வழக்குப் பதிவு செய்வது உட்பட பலவழிகளில் அடக்குமுறைகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஏவி வருகிறது. இது மனித உரிமை மீறிய செயலாகும்.

பணத்தை வாரி இறைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள பினாமி அரசு, மணல் குவாரிகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களை அடக்குமுறை மூலம் முடக்கி விடலாம் என நினைக்கிறது. இந்திய வரலாற்றில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்ற சர்வாதிகாரிகள் தான் மண்ணை கவ்வியிருக்கிறார்களே தவிர, மக்கள் போராட்டம் ஒருபோதும் வீழ்ந்ததில்லை.

எனவே புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும் மற்றும் பொது மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Trending News