அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்!

India National Cricket Team: அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படியிருக்கும், அதில் யார் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 5, 2024, 12:40 PM IST
  • பிளேயிங் லெவனில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.
  • சஞ்சு சாம்சன், சஹாலுக்கு ஆரம்ப கட்ட போட்டியில் வாய்ப்பு குறைவு.
  • சிராஜ் இன்று களமிறங்கும் வாய்ப்பும் குறைவு.
அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்! title=

India National Cricket Team: மார்ச் மாதத்தில் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் சுமார் 2 மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்து கடந்த மே 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அடுத்து  ஏப். 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் நேற்று (ஜூன் 4) நிறைவடைந்தது. இன்னும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார், இந்தியா கூட்டணிக்கு ஏதேனும் மேஜிக் நிகழுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதே பரபரப்பில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரும் (ICC T20 World CUp 2024) ஒருபக்கம் தொடங்கிவிட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியை இன்று (ஜூன் 5) விளையாடுகிறது. இனி இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த டி20 உலகக் கோப்பைதான் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இருக்கும். 2007ஆம் ஆண்டுக்கு டி20 உலகக் கோப்பையை வென்றிராத இந்திய அணி (Team India), இந்த முறை பலமான காம்பினேஷனுடன் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறது. 

அயர்லாந்து போட்டி ஏன் முக்கியம்?

குரூப் சுற்று போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறுவதே இந்திய அணி முதற்படியாக இருக்கும். இன்று அயர்லாந்துடன் மோதும் இந்தியா அடுத்து பாகிஸ்தானுடன் ஜூன் 9ஆம் தேதியும், அமெரிக்காவுடன் ஜூன் 12ஆம் தேதியும், கனடாவுடன் ஜூந் 15ஆம் தேதியும் மோதுகின்றன.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்... ஏன் தெரியுமா?

அந்த வகையில் அயர்லாந்து அணியுடனான இன்றைய போட்டி (IND vs IRE) என்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். அயர்லாந்து அணிக்கும் இதுதான் இந்த தொடரில் முதல் போட்டியாகும். இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அயர்லாந்து அணி தோற்றிருந்தாலும், அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. போட்டியின் சூழல் என்பது இந்திய அணிக்கும் புதுமையானது என்பதால் அதிக கவனத்துடன் விளையாடி இன்றைய போட்டியை வெல்வது அடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு நம்பிக்கையுடன் செல்ல முடியும். 

பலமான காம்பினேஷன்

அதேபோல், பாகிஸ்தான் உடனான போட்டிக்கும் சரியான காம்பினேஷனை அமைக்க இந்த போட்டிதான் உதவும் எனலாம். அந்த வகையில் இன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதனால், ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஓப்பனிங் இறங்குவார்கள். ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்த ஜோடி ஓப்பனிங் இறங்குவது இதுதான் முதல் முறை எனலாம். ரோஹித் அதிரடியாகவும், விராட் கோலி ஆக்ரோஷமும் நிதானமும் கலந்த வகையில் விளையாடுவதே முக்கியமாகும். 

அவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சிவம் தூபே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் இறங்குவார்கள் எனலாம். இதில் இடது - வலது காம்பினேஷனுக்காக பேட்டிங் வரிசை மாறுபடலாம். ரவிந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக இடம்பெறுவார்கள். இவர்கள் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார்கள். இதனால் 8ஆவது வீரர் வரை பேட்டிங் ஆர்டர் நீண்டிருக்கும். மற்றபடி குல்தீப் யாதவ் பிரதான ஸ்பின்னராகவு், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் பிரதான வேகப்பந்துவீச்சாளராகவும் இருப்பார்கள். தூபேவும், ஹர்திக் பாண்டியாவும் பந்துவீச்சிலும் கைக்கொடுப்பார்கள்.

இந்தியா vs அயர்லாந்து: முக்கிய வீரர்கள்

இந்திய அணி இன்று பிளேயிங் லெவனுடன் (Team India Playing XI) தான் விளையாட வாய்ப்பிருக்கிறது, இதில் விராட் கோலி, குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் முக்கிய வீரர்கள் ஆவார். விராட் கோலி கடந்த சில மாதங்களாகவே நல்ல பார்மில் இருந்து வருகிறார். அவர் அதையே இன்றும் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கலாம். ஜஸ்பிரித் பும்ராவின் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்கள் மிகவும் முக்கியமானவை. அதேபோல் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் எடுக்கும் வல்லமை பெற்றவர் குல்தீப் யாதவ். இவர் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் உதவிக்கரமாக இருப்பார் எனலாம். 

இதேபோல், அயர்லாந்து அணியை பார்த்தோமானால் அவர்களின் பிளேயிங் லெவனில் மிக முக்கியமான மூன்று வீரர்களாக மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர் ஆகியோரை சொல்லலாம். அயர்லாந்து அணியின் ஜாம்பவானான மார்க் அடேர் வலது கை பாஸ்ட் பௌலர் ஆவார். கடந்த 5 போட்டிகளில் மட்டும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல், மெக்கார்த்தியும் அவர்களுக்கு முக்கிய பந்துவீச்சாளர் ஆவார். ஹாரி டெக்டர் அயர்லாந்து அணியின் நம்பிக்கைக்குரிய டாப் ஆர்டர் பேட்டர் ஆவார். இவர்கள் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடியை உண்டாக்கலாம். 

பிளெயிங் லெவன் கணிப்பு

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்

அயர்லாந்து அணி: ஆண்டி பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, கிரேக் யங், பென் ஒயிட் 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: அதிவேக அரைசதங்களை அடித்த வீரர்கள்... டாப் 8 லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News