பார்சி மக்களின் உடல் எரிக்கவும் கூடாது, புதைக்கவும் கூடாது... ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது ஏன்?

Ratan Tata: பார்சி சமூக மக்களின் பாரம்பரிய வழக்கப்படி அல்லாமல், ரத்தன் டாடாவின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணம் மற்றும் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 11, 2024, 11:22 AM IST
  • ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
  • அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
  • பார்சி சமூக மக்கள் பாரம்பரியமாக அமைதி கோபுரம் முறையை பின்பற்றுவார்கள்.
பார்சி மக்களின் உடல் எரிக்கவும் கூடாது, புதைக்கவும் கூடாது... ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது ஏன்? title=

Ratan Tata Last Rites: இந்தியாவின் முதுபெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை இரவு காலமானார். ரத்தன் டாடா சிகிச்சை அளித்து வந்த ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கொலாபாவில் அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து உடல் எடுத்துச்செல்லப்பட்டு மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள NCPA வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. நேற்று மாலையில் அவரது உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. 

அதை தொடர்ந்து, ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் பார்சி சமூக மக்களின் பிரார்த்தனை கூடம் உள்ள வொர்லி நகராட்சி மயானத்தில் நடைபெற்றது. ரத்தன் டாடா பார்சி சமூகத்தை சேர்ந்தவர். மும்பையில் பார்சி சமூகத்தினர் உயிரிழந்தால் அவர்களது உடல் மலபார் ஹில்ஸ் பகுதியில் பார்சி மக்களால் கட்டப்பட்ட அமைதி கோபுரத்திற்கு (Tower Of Silence) எடுத்துச்செல்லப்பட்டு அங்கு பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையாக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த அமைதி கோபுரம் தக்மா என்றும் அழைக்கப்படுகிறது. 

அமைதி கோபுரம் முறை 

பார்சி சமூகத்தினர் பெர்ஷியாவில் இருந்து கடந்த 10 நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் எண்ணிக்கை ரீதியில் இந்தியாவில் மிகவும் சிறுபான்மை மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பொது சமூகத்தில் அதிக செல்வாக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேற்கு ஆசிய பகுதியில் தற்போது இருக்கும் ஈரான் நாடு முந்தைய காலத்தில் பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. அங்கு இந்த வான்வழி நல்லடக்கம் முறையை கடைபிடித்து வந்துள்ளனர். ஏனென்றால், நீர், நெருப்பு, நிலம் ஆகியவற்றை பார்சி சமூகத்தினர் புனிதமான ஒன்றாக கருதுகிறார்கள். 

மேலும் படிக்க | Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?

மும்பையின் இந்த அமைதி கோபுரம் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு பார்சி சமூக புரவலர்களால் கட்டப்பட்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் பிணந்தின்னி கழுகுகள் கிட்டத்தட்ட அழிந்துவிட்ட நிலையில், பார்சி சமூக மக்களால் இந்த அமைதி கோபுர முறையை பின்பற்றுவது கடினமானது. பார்சி-ஜோராஸ்ட்ரியர்கள் இந்த அமைதி கோபுர முறைக்கு மாற்றாக வோர்லி மயானத்தில் தகனம் செய்வதை பின்பற்றினர். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்து சைரஸ் மிஸ்ட்ரி கார் விபத்தில் உயிரிழந்தபோதும் இந்த வோர்லி மயானத்தில்தான் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மாற்று வழிமுறை

அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் 350 வருட பாம்பே பார்சி பஞ்சாயத்து என்றழைக்கப்படும் பார்சி-ஜோராஸ்ட்ரியர்கள் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் மினோ ஷெராஃப் உயிரிழந்தபோதும் பாரம்பரிய முறையப்படி தாம்காவுக்கு எடுத்துச்செல்லப்படாமல், அவரது உடல் இங்குதான் தகனம் செய்யப்பட்டது. பிணந்தின்னி கழுகுகள் போன்ற பறவைகள் இல்லாத நிலையில் உடல்கள் சிதைவடைய அதிக நேரம் எடுத்திருக்கிறது.

50 ஏக்கர் மரங்கள் நிறைந்த மலபார் ஹில் கல்லறையில் ஒரு தகனக் கூடத்தை கட்ட முக்கிய பிரமுகர்கள் அடங்கிய பார்சிகள் குழு ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், உடல்களை பாரம்பரிய முறையில் தகனம் செய்யாமல் தகனம் செய்ய விரும்புவோரின் குடும்பத்தினர்,  மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளுக்கு தங்கள் பிரார்த்தனை மண்டபங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தடை செய்தது.

வொர்லி மயானம்

அமைதி கோபுரம் நிர்வாகம் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தகனம் செய்ய விரும்புவோர் அவசரத்தின் காரணமாக இந்த வொர்லி மயானத்தை உண்டாக்கினர். முன்னாள் நகராட்சி ஆணையரும், சக பார்சி ஜாம்ஷெட் கங்காவின் உதவியுடன் 2015ஆம் ஆண்டில் இந்த வொர்லி பிரார்த்தனை மண்டபம் நிறுவப்பட்டது. இறுதிச் சடங்குகள் நகராட்சி மயானத்திலும், பிரார்த்தனை மண்டபத்திலும் நடத்தப்படும். இந்த மண்டபம் பார்சிகளால் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படவில்லை, பிற சமூகத்தினரும் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது அமைதி கோபுர முறைக்கு மாற்றாக பார்க்கப்பட்டாலும் இதன்மீது சில பார்சி சமூக மக்களுக்கு மாற்றுக் கருத்தும் இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் நல்லடக்கத்தை தேர்ந்தெடுக்கும் பார்சிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வசதியை நிர்வகிக்கும் வொர்லி பிரார்த்தனை மண்டப அறக்கட்டளை, மும்பையில் ஆண்டுதோறும் பார்சி-ஜோராஸ்ட்ரியன் சமூகத்தில் சராசரியாக 650 இறுதிச் சடங்குகளில் 100 முதல் 120 வரை தகனம் செய்யப்படுவதாகக் கூறுகிறது. பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்படுவதற்கு முன்பு, மும்பையில் பார்சிகளின் இறுதிச் சடங்குகளில் 7-8% தகனம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Ratan Tata Achievements | டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News