ஒரே பதவி - ஒரே பென்சன்: ராகுல், கெஜ்ரிவால் கைதாகி விடுதலை

ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Last Updated : Nov 3, 2016, 12:00 PM IST
ஒரே பதவி - ஒரே பென்சன்: ராகுல், கெஜ்ரிவால் கைதாகி விடுதலை title=

புதுடெல்லி: ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஓய்வுபெற்ற ராணுவத்தினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் என்பவரும் பங்கேற்றிருந்தார். போராட்டத்தின் போது அவர் தனது குடும்பத்தாரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ராம் கிஷன் கிரேவால் நேற்று காலை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்தார். தற்போது டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் ராம் கிஷனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இருக்கும் ராம் கிஷன் கிரேவாலின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோரை சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த தடையைமீறி ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதன்பிறகு சில மணி நேரம் கழித்து ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். இதையடுத்து அவரை மீண்டும் டெல்லி போலீஸ் கைது செய்தது. அவரையும், அவருடன் வந்தவர்களையும் கைது செய்து மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 70 நிமிடத்துக்கு பின்பு அனைவரையும் விடுதலை செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராம் கிஷனின் குடும்பத்தினரை விடுவிக்க மறுத்த போலீசாரிடம் ராகுல் காந்தி கூறியது:- இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரையே கைது செய்து இருக்கிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா? என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியா ராகுல்:- இறந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற என்னை மோடி அரசு கைது செய்தது, ஜனநாயக விரோத மனப்போக்கு கொண்டது ஆகும். மோடி உருவாக்கும் புதிய இந்தியா இதுதான் என்று தெரிவித்தார்.

இதேபோல் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், ராம் கிஷனின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு காரில் செல்ல முயன்றார். அவரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அவரையும் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரும் விடுவிக்கப்பட்டார். கெஜ்ரிவால் இறுதியாக 6 மணி நேரத்திற்கு பின்பு விடுதலை செய்தனர்.

Trending News