புகாரை நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக வேண்டும்: ஸ்டாலினுக்கு சவால் விட்ட ராமதாஸ்

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? எனக் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2019, 08:15 PM IST
புகாரை நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக வேண்டும்: ஸ்டாலினுக்கு சவால் விட்ட ராமதாஸ் title=

வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்த புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? எனக் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அத்துடன் கூடுதலாக தோல்வி பயமும் கண்ணை மறைப்பதால் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையும், எனது குடும்பத்தினரையும் பற்றி அருவருக்கத் தக்க அவதூறுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். தாம் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதியற்ற வகையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள தகவல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘ வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகளையெல்லாம்  டாக்டர் ராமதாஸ் அவருடைய துணைவியார் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு நினைத்தால் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றி விட முடியும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அதிமுக அணியில் பா.ம.க. இணைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதலில் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உன்னதமான அமைப்பு ஆகும். 

கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டிருந்த வன்னியர்களை கல்வியால் மட்டும் தான் முன்னேற்ற முடியும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டு காலம் போராட்டம் நடத்தினேன். எண்ணற்ற இழப்புகள், ஏராளமான உயிர்த்தியாகங்களுக்குப் பிறகு வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தேன். ஆனாலும், அரசு கல்வி நிறுவனங்களில் மிகவும் குறைவான இடங்களே இருந்ததாலும், தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாததாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வன்னியர் கல்வி அறக்கட்டளை மற்றும் அதன் மூலம் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் ஆகும்.

இந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவன் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே நான் உள்ளேன். அதைத் தவிர வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் நான் இல்லை. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவராக ஜி.கே.மணி உள்ளார். செயலாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருக்கிறார். மாவீரன் குரு அறங்காவலராக இருந்தார். மருத்துவர்கள் இரா. கோவிந்தசாமி, ப. சுந்தர்ராஜன், முனைவர் ச.சிவப்பிரகாசம் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட முடியாது. எனது மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்த தொடர்பும் இல்லை. அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்ட போது,  ஏழைக்குழந்தைகள் பயிலும் கல்விக் கோயிலாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைத்த தியாகத்துக்கு சொந்தக்காரர் அவர். தியாகங்களுக்கு விலை கேட்கும் வழக்கம் அவருக்கு கிடையாது.

அறக்கட்டளை தொடங்கப்படும் போதே நான் வெளிப்படையாக ஓர் அறிவிப்பு செய்தேன். ‘‘ வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. நன்கொடை செலுத்தாமல் அனைவரும் கல்வி கற்கலாம் என்று நான் அறிவித்தேன். அதன்படி கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கல்விக் கோயிலில் கல்வி பெற்றுச் செல்கின்றனர். ஸ்டாலின் விரும்பினால், அவரது குடும்ப குழந்தைகளைக் கூட தகுதி அடிப்படையில் கல்விக் கோயிலில் சேர்க்கலாம்; எந்தவிதமான நன்கொடையுமின்றி கல்வி பயிலலாம். அதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகம் ஒரு திறந்த புத்தகம். ஸ்டாலின் விரும்பினால் அவரது கட்சியில் உள்ள தலை சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக்குழுவை அமைக்கட்டும். அந்தக் குழு வன்னியர் கல்வி அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அவர் கூறியவாறு ஏதேனும் ஒரு சொத்து, அவ்வளவு ஏன்.... வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 10 பைசா மதிப்புள்ள குண்டூசியை என் மனைவி பயன்படுத்துவதாக ஸ்டாலின் அனுப்பும் குழு கண்டுபிடித்தால் கூட, நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா?

வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் முறைப்படி வாங்கப்பட்டவை. அதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மாறாக, பல மாவட்டங்களில் தி.மு.க அறக்கட்டளைக்காக சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் வளைக்கப்பட்டவை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். அவற்றை ஆய்வு செய்ய ஸ்டாலின் அனுமதிப்பாரா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News