மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 21, 2024, 11:01 AM IST
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
  • சித்திரை திருவிழா கோலாகலம்.
  • மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர் title=

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறும். இந்தாண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைதிருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகின்றனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு இரவு திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்தது

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்வான விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் இன்று அதிகாலை அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பையயா், கல்யான சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வலம் வந்தனர், பின் முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின்பு திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினர்.

மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்

இதனை தொடர்ந்து கோவில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களாலும், பச்சரியாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனி தனியாக எழுந்தருளினர்.

தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதனையடுத்து சுவாமி மற்றும் அம்மனின் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு ரக்சாபந்தன் எனப்படும் காப்புகட்டிய பின்னர் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்புகட்டும் வைபவமும் அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.

தொடர்ச்சியாக மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றதையடுத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் கோவில் சார்பில் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கோலகலமாக நடைபெற்றது.

அப்போது கோவிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோசம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொண்டனர். திருக்கல்யாணத்தின்போது மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது. திருகல்யாணத்தையடுத்து கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு தாலிக்கயிறும், குங்குமம் வழங்கப்பட்டது

திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 5 டன் வண்ண மலர்கள் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, நவ தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திருக்கல்யாண நிகழ்வில் கோவில் அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து விருந்து உண்டு , மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக மொய் செலுத்தி ரசிது பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News