ஜெ., வாழ்ந்த கோவிலில் வருமான வரி சோதனை: விவேக் ஆவேசம்!

போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் அறையை சோதனை செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை என்று இளவரசியின் மகன் விவேக் கூறினார்.  

Last Updated : Nov 19, 2017, 02:51 PM IST
  • ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறோம் என்று பலர் சொல்கிறார்கள். அந்த கோவிலுக்கு இன்று துன்பம் வந்து இருக்கிறது.
ஜெ., வாழ்ந்த கோவிலில் வருமான வரி சோதனை: விவேக் ஆவேசம்!  title=

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கின் தங்கை ‌ஷகிலா,  மற்றும் ஜெயலலிதாவிடம் முன்பு உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை, அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதன் பின் சோதனையும் மேற்கொண்டனர்.

விவேக், தனது தங்கையான ஷகிலாவை வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதை அறிந்ததும், உடனடியாக காரில் அங்கு விரைந்து சென்றார்.             

வேதா இல்லத்தில் இருந்து வெளியே வந்த விவேக் நள்ளிரவு 2 மணி அளவில் நிருபர்களுக்கு அளித்த  பேட்டியில்;-  எனது சகோதரி ‌ஷகிலா தனக்கு வந்த ‘சம்மன்’ அடிப்படையில் மாலை 4.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்றார். வருமான வரி இலாகா அதிகாரிகள் அவரை அழைத்துக்கொண்டு அப்படியே போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து ‘வாரண்ட்’ வைத்து சோதனை செய்து இருக்கிறார்கள். ஜெயலலிதா தங்கி இருந்த அறையை சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

அதைத் தவிர வீட்டில் உள்ள பிற அறைகள் அனைத்தையும் சோதனை செய்தார்கள். ஜெயலலிதாவுக்கு ஏராளமானோர் கடிதம் எழுதி இருந்தார்கள். அதை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 2 பென்டிரைவ், 2 லேப்டாப் ஆகியவற்றையும் எடுத்துச் சென்று இருக்கிறார்கள். இதைத்தவிர வேறு எதுவும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இதுதொடர்பாக நேரில் அழைத்து விசாரணை நடத்துவார்கள். எப்போது அழைத்தாலும் நாங்கள் நேரில் சென்று பதில் அளிப்போம். என்று அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து விவேக்கிடம் நிருபர்கள் உங்களை விசாரணைக்கு அழைத்தார்களா; சசிகலா அறையை சோதனை செய்தார்களா; என்று கேள்வி எழுப்பினர் ?

அதற்கு பதில் அளித்து பேசிய விவேக்;- என்னை அல்ல, என்னுடைய சகோதரியை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்தார்கள். அதனால் நான் வந்தேன். அவர் தங்கி இருந்த அறை உள்பட மற்ற அனைத்து அறைகளையும் சோதனை செய்து இருக்கிறார்கள். நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோவிலாக கருதுகிறோம் என்று பலர் சொல்கிறார்கள். அந்த கோவிலுக்கு இன்று துன்பம் வந்து இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்பட யாரும் தட்டிக்கேட்கவில்லை. என்பது வருத்தம் அளிப்பதாக பதில் கூறினர்.

 

 

Trending News