கார்கில் விஜய் திவாஸ்: 1999-ல் IND-PAK போரில் 20 ஆண்டுக்கு முன்பு நடந்தது என்ன..

கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு வெற்றி தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது!!

Last Updated : Jul 26, 2019, 08:40 AM IST
கார்கில் விஜய் திவாஸ்: 1999-ல் IND-PAK போரில் 20 ஆண்டுக்கு முன்பு நடந்தது என்ன.. title=

கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு வெற்றி தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது!!

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் 1999 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள்... காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஊடுருவியிருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்ற 5 இந்திய வீரர்களைச் சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம் அவர்களைச் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொன்றது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தச் சென்ற மிக் மற்றும் மிராஜ் ரக விமானங்களையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

தொடர் தாக்குதலால் முதலில் பாகிஸ்தான் வெற்றி முகம் காட்டினாலும், அதுவரை இலகுரக தாக்குதல்களை நடத்தி வந்த இந்தியா முழு உக்கிரத்துடன் களத்தில் இறங்கியது. இதையடுத்து இந்திய பீரங்கிகள் களமிறங்கி குண்டு மழை பொழிந்தன...

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப் பிரிவினரின் துப்பாக்கிகள் தடதடக்கும் சப்தம் பனிமலையைப் பதற வைத்தது. இதன் பயனாக திராஸ், தோலாலிங் உள்ளிட்ட பகுதிகளை இந்தியா கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் அதிரடித் தாக்குதல்கள் மூலம் பாயின்ட் 5060 ((point 5060)), பாயின்ட் 5100 ((point 5100)) ஆகிய நிலைகளையும் முக்கிய சிகரமான டைகர் ஹில்ஸ் பகுதியையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது. தரைப்படை வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது இந்திய விமானப் படை.

இந்த நிலையில் இந்திய போர்க்கப்பல்கள் காராச்சி துறைமுகத்தை நெருங்கியதை அறிந்த பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. முப்படைகளும் களமிறங்க, முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டது போல் திணறியது பாகிஸ்தான்.

இறுதியாக இந்தியாவின் தொடர் தாக்குதலை எதிர்பாராத பாகிஸ்தான், போரை நிறுத்த உதவி செய்யுமாறு அமெரிக்காவிடம் மண்டியிட்டது. ஆனால் அதற்குள் பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும் கொன்று குவித்தது இந்திய ராணுவம். நமது தரப்பில் 576 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து கார்கிலில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். அந்த நாள்தான் ஜூலை 26.

 

Trending News