சசிகலா சிறை சலுகை: விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு

Last Updated : Jul 13, 2017, 12:56 PM IST
சசிகலா சிறை சலுகை: விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு title=

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சோதனையின் போது ரூபாவிடம் அதிகாரிகள் கூறினார்கள்.

இதையடுத்து ரூபா கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுத்து இருப்பது சிறை விதிமுறைப்படி தவறு. மேலும் தாங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முறைப்படி பதில் அளிக்க வேண்டும் என டிஐஜி ரூபா தனது அறிக்கையில் கூறியிருந்தார். 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சத்யநாராயணா கூறியது, சதி திட்டத்தில் என்னை சிக்க வைக்க டி.ஐ.ஜி. ரூபாய் முயற்சிக்கிறார். சசிகலாவுக்கு எந்தவித சலுகைகளும் தரப்படவில்லை. அவருக்கென தனியாக சமையல் அறை எதுவும் அமைக்கப்படவில்லை. மேலும் சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என்று டிஜிபி சத்யநாராயணா கூறினார்.

இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் வழங்கப் பட்டு உள்ளதா? என விசாரணை நடத்த கர்நாடகாவின் முதல்-அமைச்சர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Trending News