மணிப்பூர் வன்முறை... ரயில் சேவைகள் ரத்து... விமானம் மூலம் மீட்பு பணிகள்!

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பல மாநிலங்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 8, 2023, 07:17 PM IST
  • இம்பாலை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலைகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக செல்கின்றன.
  • மெய்தே சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல்.
  • விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ AAI நடவடிக்கை.
மணிப்பூர் வன்முறை...  ரயில் சேவைகள் ரத்து... விமானம் மூலம் மீட்பு பணிகள்! title=

மணிப்பூரில் நடந்த வன்முறையால் இதுவரை 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்புப் படையினரும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டத்தை சிறிது நேரம் தளர்த்தியுள்ளனர். மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர். மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா சிறப்பு விமானங்களை இயக்கியுள்ளன. இது தவிர, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இம்பாலில் இருந்து வெளியேற விமானங்கள் மூலம் செல்வதே சிறந்த வழி. இத்தகைய சூழ்நிலையில், இம்பால்-கொல்கத்தா வழித்தடத்தில் விமான கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அனைத்து விமானங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டணம் 30,000 ரூபாயை எட்டியது. 

மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளன. ராஜஸ்தான் அரசும் சுமார் 125 ராஜஸ்தான் மாநிலத்தவர்களை அழைத்து வர இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளது. மணிப்பூரை ஒட்டியுள்ள அஸ்ஸாம், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகியவை ஏற்கனவே தங்கள் மாநிலத்தவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. மணிப்பூரில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 240 மாணவர்கள்  அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் பலர் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர்.

மணிப்பூரில் இருந்து திரும்புவது கடினமாக இருப்பதற்கான காரணம்

இம்பாலை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலைகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழியாக செல்கின்றன. ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள பெரும்பாலான வெளிமாநில மாணவர்கள் ஐஐஐடிகள் மற்றும் என்ஐடிகள் மற்றும் பிராந்திய மருத்துவ நிறுவனங்கள் போன்ற பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்றனர். அவர்களும் மிகவும் பதற்றமான நிலையில் உள்ளது.

மணிப்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மணிப்பூரின் நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மெய்தே சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தை எஸ்ஐடி விசாரிக்க கோரி பழங்குடியினர் அமைப்பு ஒன்று பொதுநல வழக்கு தொடர்ந்தது. 

மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

கடந்த வாரம் பழங்குடியினருக்கும் பெரும்பான்மையான மெய்தே சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே நடந்த வன்முறை மோதல்களால் மணிப்பூர் அதிர்ந்தது, இதில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறே செய்யப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதைக்குத் திரும்புவது போல் தோன்றியது.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ AAI நடவடிக்கை 

மணிப்பூரின் சில பகுதிகளில் வன்முறை வெடித்ததால் ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில் விமானப் பயணிகளுக்கு உதவ இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தலைநகர் இம்பாலுக்கு மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களுக்கான டிக்கெட் ரத்து கட்டணத்தை ரத்து செய்வது உட்பட பல நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் எடுத்துள்ளன. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல AAI மாநில அரசுடன் ஒருங்கிணைத்து வருகிறது. மே 4 முதல் அமைச்சகம் உதவி மையத்தையும் அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூடுதல் விமானங்களை இயக்க முடிவு

மாநிலத்தில் இணைய சேவைகள் கிடைக்காததால், ஹெல்ப் டெஸ்க் கவுண்டரில் டிக்கெட்டுகளை அச்சிடுவதற்கு லேன் இணைய வசதியையும் AAI வழங்கியுள்ளது. மே 6 ஆம் தேதி வரை மொத்தம் 10,531 பயணிகள் இம்பால் விமான நிலையத்திற்கு வந்ததாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 50 மற்றும் 6 கூடுதல் விமானங்கள் உட்பட மொத்தம் 108 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

உ.பி மாணவர்களை அழைத்து செல்ல அம்மாநில அரசு நடவடிக்கை

மே 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு நிலைமை மோசமடைந்ததால், உ.பி.யில் படிக்கும் மாணவர்களை உ.பி அரசு  அழைத்து செல்ல உள்ளது. மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூர் அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு அவர்களை வீடு திரும்புவதற்கான நடவடிக்கையைத் தொடங்க மாநில உள்துறைக்கு உத்தரவிட்டார்.

நடவடிக்கை ஒருங்கிணைக்கும் ஆணையர் அலுவலகம்

மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஆணையர் அலுவலகம் மாணவர்களைத் தொடர்புகொள்வது முதல் அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவது வரை  நடவடிக்கை அனைத்தையும் ஒருங்கிணைக்கும். மாணவர்கள் அல்லது அவர்களது பாதுகாவலர்கள் பேரிடர் நிவாரண கட்டணமில்லா எண்ணான 1090ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க | பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி - நாகா சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிப்பு

மணிப்பூரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். ராணுவ ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 23,000 பேர் மீட்கப்பட்டு ராணுவப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. துணை ராணுவப் படைகள் மற்றும் மத்திய போலீஸ் படைகளைச் சேர்ந்த சுமார் 10,000 பணியாளர்களும் மணிப்பூரில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை
முதல்வர் என். பிரேன் சிங், அமைதி தொடர்பான முயற்சிகளை அடிமட்ட அளவில் செயல்படுத்த ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அமைதிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று  கூறினார். மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்ட சமூகத்தினர் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். 

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் வெளியிட்ட கருத்து

ஒரு வருடத்திற்கு முன்பு பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூலம் மணிப்பூர் வாக்காளர்கள் "மோசமான துரோகத்தை" உணர்கிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார். சமீபகாலமாக வன்முறை இனக்கலவரங்களைக் கண்ட மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

மணிப்பூரில் வன்முறைக்கு காரணம் 

மணிப்பூரில் உள்ள பெரும்பான்மையான மெய்தே சமூகத்தினர் தமக்கு பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'அனைத்து பழங்குடியின மாணவர் சங்கமான மணிப்பூர்' (ATSUM) சார்பில், 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' புதன்கிழமை நடைபெற்றது. இதன் போது சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் வன்முறை வெடித்தது.

மேலும் படிக்க | தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்! ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பேசிய பிரதமர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News