சினிமா பாணியில் ஸ்கெட்ச் செய்து கொலை! பழிக்கு பழி வாங்கிய தம்பி!

2020ம் ஆண்டு தனது அண்ணனை கொலை செய்தவரை வெட்டி கொலை செய்து பழிக்கு பழி வாங்கிய தம்பி.  

Written by - RK Spark | Last Updated : Jun 27, 2022, 02:04 PM IST
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்த கொலைக்கு பழிக்கு பழியாக ரவுடி வெட்டி கொலை.
  • அண்ணனை கொன்றவரை காத்திருந்து பழி வாங்கிய தம்பி.
  • போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சினிமா பாணியில் ஸ்கெட்ச் செய்து கொலை! பழிக்கு பழி வாங்கிய தம்பி! title=

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான கஞ்சா மணி கடந்த 2020ஆம் ஆண்டு பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா மணி குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போது மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. கஞ்சா விற்பனை, மாமூல் வாங்குவது உள்ளிட்ட தொழில் போட்டியில் கஞ்சா மணியை கொலை செய்த மதிவாணன் உள்ளிட்டோர் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா மணியின் கொலைக்கு பழி தீர்க்க அவரது தம்பி பிரபா என்கிற பிரபாகரன் திட்டம் தீட்டி தகுந்த நேரத்திற்காக காத்திருந்தார். 

மேலும் படிக்க | மதுக்கடைகளை மூடாதீர்கள் - களத்தில் குதித்த மதுப்பிரியர்கள்

காந்திநகரை சேர்ந்த மதிவாணன் (26) அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று தமது நண்பர்களோடு இருந்தார். அப்போது பிரபாவின் கூட்டாளி ராம்கி மதிவாணனுக்கு மது மற்றும் பிரைட் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். மதிவாணன் மது போதையானதும் பிரபாவிற்கு ராம்கி தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தமது அண்ணன் கொலைக்கு பழி வாங்குவதகற்காக தக்க சமயம் பார்த்து காத்திருந்த பிரபா தமது கூட்டாளிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து மதிவாணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அப்போது உடனிருந்த மதிவாணனின் கூட்டாளிகள் மூவரையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் வெட்டு காயங்களுடன் இருந்த மதிவாணனின் கூட்டாளிகள் ஹேமந்த், சரத்குமார், தனுஷ் ஆகிய மூவரையும் மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட மதிவாணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பாலவேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் கத்தி, அரிவாள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ராம்கி, சூர்யா என்பதும் ரவுடியை கொலை செய்து தப்பி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கஞ்சா மணியின் தம்பி பிரபா தலைமறைவான நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக மற்றொரு கொலை அரங்கேறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அவலம் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News