அதிமுக-அமமுக பிரச்சினையை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். திமுக-தான் எங்கள் பொது எதிரி-அமைச்சர் வேலுமணி

கௌண்டர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த அறிக்கை, அமமுக மற்றும் சசிகலா குறித்த அதிமுக நிலைப்பாடு குறித்து மீண்டும் ஒரு முறை கலவையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2021, 11:45 AM IST
  • சசிகலாவின் வருகை பல மாற்றங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
  • நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு ஒத்ததாகும்-வேலுமணி.
  • அதிமுக சசிகலாவை ஏற்றுக்கொண்டாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்-வைகை செல்வன்.
அதிமுக-அமமுக பிரச்சினையை நாங்கள் தீர்த்துக்கொள்வோம். திமுக-தான் எங்கள் பொது எதிரி-அமைச்சர் வேலுமணி  title=

சென்னை: நான்கு ஆண்டு கால சிறைவாசத்தை முடித்து வி.கே.சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பி விட்டார். சசிகலாவின் சென்னை வருகையைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் பரபரப்பான பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

சசிகலா சென்னை திரும்பிய அடுத்த நாளே, நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செவ்வாயன்று, அதிமுக-அமமுக ஒன்றிணைவது சாத்தியம் என்பது போல் குறிப்புக்காட்டியுள்ளார். இரு கட்சிகளுக்கு இடையிலான போட்டியை ஒரு குடும்பத்திற்குள் தோன்றும் பிரச்சினைகள் போன்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு ஒத்ததாகும். இது சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சினை. நாங்கள் அதைத் தீர்த்துக்கொள்ள முடியும். ஆனால் எங்கள் பொதுவான எதிரி திமுக (DMK) தான், நாங்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும்” என்று கோயம்புத்தூரில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் வேலுமணி கூறினார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற இரு கட்சிகளும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி இரு கட்சிகளும் இணைவதற்கான தனது விருப்பத்தை டிடிவி. தினகரன் வெளிப்படுத்திய பின்னர் வேலுமனியின் இந்த கருத்து வந்துள்ளது. சசிகலா (Sasikala) விஷயத்தில் அமைச்சர் வேலுமணி இதுவரை மௌனமாகவே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கொடியைப் பயன்படுத்திய சசிகலாவுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் டி.ஜி.பி.-யிடம் புகார் அளித்தபோதும் அவர் எதுவும் பேசவில்லை. ஜெயக்குமார், சண்முகம், தங்கமணி போலல்லாமல், வேலுமணி பகிரங்கமாக சசிகலாவை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சிறைவாசத்தில் இருந்து சென்னைக்கான சசிகலாவின் அரசியல் பாதை நெடுஞ்சாலையா? முட்டுச்சந்தா?

கௌண்டர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த அறிக்கை, அமமுக மற்றும் சசிகலா குறித்த அதிமுக நிலைப்பாடு குறித்து மீண்டும் ஒரு முறை கலவையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது. கட்சியில் சசிகலா அல்லது டிடிவி தினகரனுக்கு இடமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) உறுதியாக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை இரவு வேலூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரைக் குறிப்பிட்டு, ஒரு குழு அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

"10 ஆண்டுகளாக, தினகரன் கட்சியில் இல்லை. அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அவர் அதிமுகவில் மீண்டும் நியமிக்கப்பட்டார். எங்களிடமிருந்த 18 எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்ற அவர் அவர்களை தெருவில் நிற்க விட்டார். இன்னும் அவரைப் பின் தொடருபவர்கள் இறுதியில் தெருக்களில்தான் நிற்பார்கள்” என்றார். அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், அதிமுக சசிகலாவை ஏற்றுக்கொண்டாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

"மறைந்த முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் சசிகலாவை எங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள், வேறு யாரையாவது தேர்வு செய்யாமல் ஏன் சசிகலாவைத் தலைவராக தேர்வு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். மக்கள் தெளிவாக சசிகலாவை ஏற்கவில்லை” என்றார் வைகை செல்வன்.

சசிகலாவின் வருகை பல மாற்றங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதிமுக-வில் இணையும் சசிகலாவின் கனவு நிஜமாகுமா, அல்லது, சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என்ற முதல்வரின் நிலைப்பாடு நிலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ALSO READ: திமுக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அமமுக உறுதி செய்யும்: டிடிவு தினகரன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News