ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?

Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2024, 05:01 PM IST
  • மது ஒழிப்பு மாநாட்டில் ஆயிரக்கணக்கில் பெண்கள் பங்கேற்பார்கள் - திருமாவளவன்
  • பாஜக மதுவிலக்கு விவகாரத்தில் மாநில அரசு மீது பழிப்போடுகிறது - திருமாவளவன்
  • பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை - திருமாவளவன்
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன? title=

Tamilnadu Latest News Updates: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுநகரில் மைய மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் அவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.

பின்பு விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் ஐந்தாவது மாநில பிரதிநிதித்துவ பேரவை நிகழ்சியில் கலந்து கொண்டார். பின்பு தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பறிப்போகும் வேலைவாய்ப்புகள்

அப்போது பேசிய அவர்,"தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருக்கிறேன். பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இளைய தலைமுறையின் வேலைவாய்ப்பு பறிபோகின்றன. எனவே இந்த ஐந்தாவது மாநிலப் பிரதிநிதித்துவ பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்ல விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வினை ரத்து செய்து விடுவாரா? கடம்பூர் ராஜூ!

குறிப்பாக அவுட் சோர்சிங் என்பது கூடவே கூடாது. புதிய வேலைவாய்ப்புகள் அரசு மூலமாகவே எடுக்க வேண்டும். ஏற்கனவே பணியாற்றிய கூடியவர்களுக்கு பண பலன்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். வரும் அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் சமகாலத்தில் முக்கியமான இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

மது விலக்கு மாநாடு

அரசமைப்புச் சட்டம் 47-இன் மதுவிலக்கு ஆலோசனை குழு, 1954ஆம் ஆண்டில் ஏராளமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு மதுவிலக்கு தொடர்பான தேசிய கொள்கையை வரையறுக்க வேண்டும். அதன் மூலம் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என அந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் விசிக அரசிற்கு கோரிக்கை வைக்கிறது. தமிழக அரசும் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். விடுதலை சிறுத்தை கட்சி நடத்தும் மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்" என்றார்.  

மேலும் தொடர்ந்த அவர்,"பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதா என பாஜகவினர் பதிலளிக்க வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது காங்கிரஸ் கட்சி இருக்கும்போது கொண்டு வந்தது. பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதற்கு பாஜக காரணம் இல்லை. நிதிஷ் குமார்தான் காரணம். அதில் அவர் உறுதியாக இருக்கிறார். இந்த மாநிலங்களைத் தவிர பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலில் இல்லை.

மாநில அரசு மீது பழிப்போடும் பாஜக

அவர்கள் பாஷையில் சொல்வதென்றால் மதுவால் பாதிக்கப்படுவது பெரும்பாலான இந்துக்கள்தான். இந்துச் சமூகத்தின் பாதுகாவலர் என கூறும் பாஜக இளம் தலைமுறையைச் சார்ந்த இந்து சமூகத்தினரை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசு மீது பழி போட்டுவிட்டு மத்திய ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருப்பது மக்கள் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறதா என கேள்வி எழுகிறது. 

மேலும் படிக்க | மறுபிறவினு ஒண்ணு இருந்தா கலைஞர் குடும்பத்தில பிறக்கணும் - செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தாலும் அரசுக்கு நெருடலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனையை கூட்டணியில் இருந்து கொண்டே நாங்கள் கையில் எடுத்துள்ளதை பாஜக பாராட்ட வேண்டுமே தவிர இதை அவர்கள் கேலி செய்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் நோக்கம் மக்கள் நலன் அல்ல. திமுக கூட்டணியை பிளவுபடுத்துவது ஒன்றுதான்‌.

ஆபத்தான ஒரே நாடு ஒரே தேர்தல்...

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்கள் மீதும் மீனவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என சிலர் நம்பினர். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் பாஜக ஆட்சியில் இருந்தும் தமிழக மீனவர்களை பாதுகாக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் பிரச்சினையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மீனவர்கள் பிரச்சினையும் ஈழத்தமிழர் பிரச்சினையும் எப்படி இருந்ததோ அதேபோல இதை தற்போதும் இருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜக அரசியல் செயல் திட்டங்களில் ஒன்று, இது மிகவும் ஆபத்தானது. குடியரசுத் தலைவரின் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக நினைக்கிறது. எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர். இதை விசிக கடுமையாக எதிர்க்கிறது" என்றார். 

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சே, பிரேமதாசா வாரிசுகளை இலங்கை மக்கள் புறக்கணித்து உள்ளனர்.  தேர்ந்தெடுக்கப்பட உள்ள திச நாயக்கே தமிழர்களுக்கு ஆதரவானவர் என சொல்ல முடியாது. முற்போக்கு கருத்து கொண்டவர் என சொல்லப்படுகிறது, பொறுத்து இருந்து பார்ப்போம்" என்றார். 

மேலும் படிக்க | ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கப்படமாட்டார்கள் - எடப்பாடி பழனிசாமி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News