ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!

ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு என்பது தெருயுமா?. 

Last Updated : Mar 6, 2018, 09:20 AM IST
ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்! title=

சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் சாய்வு பாதைகள், பார்க்கிங் வசதிகள், தனி நடைபாதைகள், கழிப்பறைகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை முழுவதும் உள்ள 14 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு தரமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கொண்டு சுமார் 70 ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதற்கான ரூ.3.80 கோடி மதிப்பிலான டெண்டர் விடும் பணிகள் மார்ச் 3வது வாரத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கு ரிமோட்டில் இயங்கும் கார் வசதிகள் உள்ளது. இதேவசதி தாம்பரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த ஜனவரி மாதம் வரை 12,735 மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அடையாள அட்டைகள் மூலம் தங்களுக்கான வசதிகளை அவர்கள் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சமீபத்தில் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு 24 மணி நேரமும், 7 நாட்களும் இயங்கும் சிறப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது. 

சென்னை மண்டலத்தில் உள்ள 20 ரயில் நிலையங்களில் 39 லிப்ட் வசதிகள் உள்ளது. 2 ரயில் நிலையங்களில் மேலும் 3 லிப்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Trending News