கலெக்டர் ஆஃபிஸில் 28 பேருக்கு இன்டர்வியூ... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ1.26 கோடி மோசடி!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 1 கோடியே 26 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 2, 2022, 01:31 PM IST
  • கலெக்டர் அலுவலகத்தில் 28 பேருக்கு போலி இன்டர்வியூ
  • அரசு வேலை வாங்கித்தருவதாக 1.26 கோடி பணம் மோசடி
கலெக்டர் ஆஃபிஸில் 28 பேருக்கு இன்டர்வியூ... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ1.26 கோடி மோசடி!  title=

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சமையல் காண்ட்ராக்டர் பணிகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செக்கானூரணியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் சேகரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது முனீஸ்வரனுடைய நண்பர் ரஞ்சித்தும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளராக பணிபுரியும் பாண்டியராஜனும் நல்ல நண்பர்கள் எனக்கூறி நம்ப வைத்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைய காலிபணியிடங்கள் இருப்பதால் அவரின் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சேகர் தனது மகன் மற்றும் மகளுக்கு வேலை வாங்கிதருமாறு கேட்டபோது, தலா ஒரு உதவியாளர் வேலைக்கு 4லட்சம் ரூபாய் வீதம் 8 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்டு சேகர் குடும்பத்தார் 8 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து முனீஸ்வரனிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று கேட்டபோது சில மாதங்களில் வந்துவிடும் என கூறியுள்ளனர். இதனையடுத்து  கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வருவாய் துணை மற்றும் மதுரை மாநகராட்சி துணை அலுவலர் பணிக்கு வேலைக்கு மற்றும் பயிற்சிக்கு வருமாறு மதுரை மாவட்ட அலுவலகத்திலிருந்து வருவது போல் பணி ஆணை அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | இங்கிலாந்தில் வரலாறு படைக்குமா இந்தியா? பும்ராவுக்கு காத்திருக்கும் சவால்

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை கிடத்ததாக எண்ணிய சேகர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் இது குறித்து பகிர்ந்துள்ளார். அப்போது அவர்களும் அரசு வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று சேகரிடம்  கூறியுள்ளனர்.

சேகர் இது குறித்து முனீஸ்வரனிடம் கேட்டபோது 100க்கும் மேற்பட்ட பணிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர் என்று கூறி நம்ப வைத்துள்ளார்.

இதனையடுத்து சேகரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான சுமார் 26 நபர்களிடம் அலுவலக உதவியாளர் பணிக்கு என ரூ.4லட்சம் முதல் 4லட்சத்தி 80 ஆயிரம் என 17 நபர்களிடமும், அலுவலக ஆய்வாளர் பணிக்கு சுமார் 8 லட்சம் வீதம் 5 நபர்களிடமும், துப்புரவு பணியாளர் பணிக்கு சுமார் 1 லட்சத்தி் 50ஆயிரம் என மொத்தம் ரூ. 1கோடியே 26 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்  பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். மேலும் வேலைக்கான பணி ஆணை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில் 5 மாதம் கழித்து பணம்பெற்றிருந்த சேகரின் மகன் , மகள் உட்பட 28 நபர்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் கையெழுத்துடன் வேலைப்பணி ஆணை அசல் நகலை பதிவு தபால் மூலம் ஆட்சியர் அலுவலகத்திருந்து வருவது போல் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்ததுள்ளனர்.

இதனை தொடர்ந்து 2021, நவம்பர் 23ஆம் தேதியன்று  அலுவலக நேரத்திற்கு முன்பாகவே காலை 08.00 மணி முதல் 08.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்காக வருமாறு கூறி வரவைத்துள்ளனர்.

இதனையடுத்து மேற்படி நபர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கேன்டீன் அருகே உட்கார வைத்து வாடிப்பட்டி வட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து ஆட்சியரின் உதவியாளர் என கூறிய பாண்டியராஜன் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும் நேர்காணல் நடத்தியுள்ளனர்.

அப்போது நேர்காணலுக்கு வந்த அனைவரிடமும் வழங்கப்பட்ட அசல் பணி ஆணைகளையும் மற்றும் அனைத்து படிப்பு சான்றிதழ்கள், PAN கார்டு, ஆதார் கார்டு. ஸமார்ட்கார்டு, காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் ஆகிய அனைத்தையும் வாங்கிவைத்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து நேர்காணலுக்கு வந்தவர்களிடம்  இன்னும் 5 நாட்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று பணியில் சேருங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து பல நாட்கள் ஆகியும் வேலைக்கு அழைக்காத நிலையில் முனிஸ்வரன், பாண்டியராஜன், ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் வேலைக்கு சேர சொன்ன இடத்தில் விசாரித்த போது அப்படி ஒரு பணி ஆணை எதுவும் அவர்களுக்கு வரவில்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மூன்று பேரையும் பிடித்து மக்கள் கேட்டபோதுதான், மாவட்ட ஆட்சித்தலைவரின் கையெழுத்துடன் போலியான பணிஆணை தயார் செய்து அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 28 பேரும் பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தை தரமுடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக பணத்தை இழந்த சேகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட செக்காணூரணியை சேர்ந்த முனீஸ்வரன் மற்றும் வைகை வடகரை பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான ரஞ்சித்தை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ஆட்சியரின் பெயரில் பணி ஆணை வழங்கியதோடு, ஆட்சியர் அலுவலகத்திலயே நேர்காணல் நடத்தி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News