மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற அரசாக தமிழக அரசு உள்ளது - ஸ்டாலின்

Last Updated : Jun 21, 2017, 12:38 PM IST
மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற அரசாக தமிழக அரசு உள்ளது - ஸ்டாலின் title=

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு அஞ்சி, மத்திய அரசின் காலில் விழுந்து லாலி பாடும் நிலையில் தமிழக அரசு செயல் படுகிறது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபை தொடங்கிய நாளன்றே, நான் சபாநாயகர் அவர்களின் கடிதம் கொடுத்திருந்தேன். 

அதனடிப்படையில் இன்று சட்டமன்றத்தில் நான் எழுந்து, “மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்துக்கு தடை கொண்டு வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”, என்று பிரச்னை எழுப்பினேன். பக்கத்தில் உள்ள புதுவை மாநிலத்தில் அந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று ஏகமனதாகத் தீர்மானம் போடுகிறார்கள். அதேபோல, கேரள மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடுகிறார்கள். மேகாலயா மாநில சட்டமன்றத்தில் அதுபோல தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடைபெறு கிறது. பாஜகவை சேர்ந்தவர் தான் முதலமைச்சராகவும் இருக்கிறார். அந்த மாநிலத்தில் கூட, இந்தச் சட்டம் சரியான சட்டமல்ல, பல திருத்தங்களை கொண்டு வந்த பிறகுதான் இதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி அங்கேயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதிமுகவின் தோழமைக் கட்சிகளாக உள்ள ஓரிரு கட்சிகளும் இதை எதிர்த்துப் பேசி, அதன் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சொன்ன பிறகு, பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் இதுபற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், ஏதோ ஒரு அறிக்கையைப் படித்துவிட்டு அமர்ந்து விட்டார். அதுபற்றி எதுவும் பேசாமல் அமர்ந்து விட்டார்.

ஆனால், தமிழக அரசு பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் காலில் விழுந்து கிடக்கின்ற, பிஜேபி ஆட்சி எதைக் கொண்டு வந்தாலும் அதற்கு அப்படியே அடிபணிந்து, பிஜேபியின் காலில் விழுந்து, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற ஒரு அரசாக இந்த அரசு இருந்து கொண்டுள்ளது என்பதற்கு, இன்றைக்கு சட்டமன்றத்தில் நடந்திருக்கின்ற நிகழ்ச்சி ஒரு சாட்சியாக, சான்றாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த ஆட்சி பயந்து, அஞ்சி நடுங்கி, மத்திய அரசின் காலில் விழுந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News