சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து HC!

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Last Updated : Mar 3, 2020, 12:56 PM IST
சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து HC! title=

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேர்வானதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதி மன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. அதன் பின்னர்,  எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்., 2 ஆம் தேதி தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. 

அதில், வேலூரில் மாவட்டத்தில் 1019 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, தேர்வு முறைகேடு குறித்து ஆவணங்களை ஆராயாமல் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த தனி நீதிபதியின் உத்தரவு தவறு. தனி நீதிபயின் இந்த உத்தரவு தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.

இந்த வழக்கில் காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், தமிழக அரசின் மேல் முறையீட்டை அனுமதித்த தலைமை நீதிபதி, தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்தனர். மேலும், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Trending News