தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு!

Last Updated : Oct 11, 2017, 03:39 PM IST
தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு!  title=

தேமுதிக சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு குறித்து விழிப்புணர்வு! 

நாளை முதல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதித்தவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவிகள் வழங்கப்படும். மேலும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்தில் சுனாமி, மழை, புயல், வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை இடர்பாடுகள் வரும் போதெல்லாம், தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காக என்றைக்குமே உதவிசெய்யும். 

அந்தவகையில் தமிழகமெல்லாம் ஆட்கொண்டு இருக்கும் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவின் அனைத்து மாவட்டம் சார்பாக நாளை ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்கிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் குப்பைகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் சாக்கடைகளை சீர்செய்தல், கொசு மருந்து தெளித்தல், அனைத்து பகுதியிலும் பிளிச்சிங் பவுடர் போடுவது போன்ற களப்பணிகளை ஆற்றவேண்டும். 

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகள் அடித்து மக்களுக்கு விநியோகம் செய்து டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

எந்த ஒரு மக்கள் பிரச்சனையிலும் களம் காணும் தேமுதிக இந்த முறையும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் நேரடியாக சென்று உதவி செய்யும் வகையில் திருப்பூர் மற்றும் கோவையில் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் கழக அவைத்தலைவர் திரு.அழகாபுரம். 

ஆர்.மோகன்ராஜ் அவர்களும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கழக பொருளாளர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்களும், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களும், சென்னை மற்றும் திருவள்ளூரிலும் கழக துணை செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி அவர்களும், திருப்பூர் மற்றும் கோவையில் கழக துணை செயலாளர் திரு.ஏ.எஸ்.அக்பர் அவர்களும், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு கழக துணை செயலாளர் திருமதி.பேராசிரியர்.எஸ்.சந்திரா அவர்களும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு.ஏ.ஆர்.இளங்கோவன் அவர்களும், இதுபோன்ற மற்ற அனைத்து மாவட்டங்களில், மாவட்ட கழக செயலாளர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உதவிகளை செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு செயலாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending News