அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இர்ஃபான் பதான் அறிவிப்பு

முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உடன் ஒப்பிடப்பட்ட 35 வயதான இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 4, 2020, 07:19 PM IST
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இர்ஃபான் பதான் அறிவிப்பு title=

புது டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக 35 வயதான இர்பான் பதான் இன்று (சனிக்கிழமை) அறிவித்தார். இர்ஃபான் பதான் 29 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 24 டி 20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 301 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 சதம் மற்றும் 6 அரைசதங்கள் அடித்துள்ளார். 2004-ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பதான், "நான் எனது ரசிகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் திரும்பி வருவேன் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள். அவர்களின் அன்பு மற்றும் ஆதரவோடு இந்த ஓய்வு என்ற முடிவு எடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில், இர்பானை முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் உடன் ஒப்பிடப்பட்டார். இடது கை பந்து வீச்சாளரான இவர், இந்திய அணி முக்கியமான வெற்றிகளை பெற காரணமாக இருந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்தார். கூடுதலாக, 2007 டி-20 உலகக் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு உறுதுணையாக இருந்தவர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியாளர்களும் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். 

அவர் கடைசியாக ஒருநாள் போட்டி 2012 இல் விளையாடினார். ஒரு காலத்தில், அவர் உலகின் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்பட்டார். ஆனால் ஆல்ரவுண்டராக மாற அவர் எடுத்த முயற்சி ஒரு நல்ல கிரிக்கெட் நட்சத்திரத்தை இந்திய அணி இழக்க நேரிட்டது.

ஓய்வை அறிவித்த இர்பான், "இன்று நான் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ். லட்சுமன் உட்பட என்னை எப்போதும் ஊக்குவித்த எனது கிரிக்கெட் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

2007 டி 20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இர்பான் பலமான பந்து வீச்சை நிகழ்ந்தினார். அந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 16 ரன்களுக்கு மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் போட்டியின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். 

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த மூன்று பந்து வீச்சாளர்களில் இர்பான் ஒருவர். மேலும், டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த உலகின் ஒரே பந்து வீச்சாளர் இவர் தான். 2006 இல் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது பதான் இந்த ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News