மாணவர்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி: ராம்நாத் கோவிந்த்!

நாட்டின் 6 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 5, 2018, 08:41 PM IST
மாணவர்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி: ராம்நாத் கோவிந்த்!  title=

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று (மே 5) சென்னை பல்கலைக்கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். 

அப்போது விழாவில் பேசிய அவர், மாணவர்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது என்றும், பட்டம் பெறும் மாணவர்கள், தங்களது படிப்பை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
 
சென்னை பல்கலைக் கழகம் பல்கலைக்கழகம் 6 ஜனாதிபதிகளையும், 2 நோபல் பரிசு பெற்றவர்களையும் நாட்டுக்கு உருவாக்கி தந்துள்ளது என்றார். மேலும், தமிழ்மொழியின் சிறப்பு குறித்து பேசிய குடியரசுத் தலைவர், உலகிலேயே தமிழ்மொழி தான் தொன்மையான மொழி என்றார்.

இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல உயர்கல்வி துறைகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு மிகவும் உறுதுணையாக அமையும். கல்வி நிறுவனங்கள் திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் கற்ற கல்வியையும், திறமையையும் பங்களிக்க வேண்டும்.

இந்த விழாவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுனருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். துணைவேந்தர் டாக்டர் துரைசாமி வரவேற்று பேசினார். துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசினர்.

அதன் பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கக் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

கல்லூரியில் முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதக்கம் வழங்கி கௌரவித்தார். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டு சென்றார்.

Trending News