சபரிமலை போராட்டம்: இதுவரை 2 பேர் பலி 266 பேர் கைது, தடுப்பு காவலில் 334 பேர்

சபரிமலை விவகாரத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 3, 2019, 07:13 PM IST
சபரிமலை போராட்டம்: இதுவரை 2 பேர் பலி 266 பேர் கைது, தடுப்பு காவலில் 334 பேர் title=

சபரிமலையில் நேற்று அதிகாலை இரு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்தது. அதேவேளையில் கேரளா காங்கிரஸ் கட்சியினர் இன்று கருப்பு தினமாக அனுசரிப்பதாக கூறியது.

கேரளாவில் சில இடங்களில் பாஜகவினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள கம்யூனிஸ்ட்டுகள் நிர்வாகிகள் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் இடையே நேற்று கேரள தலைமை செயலகம் முன்பு மோதல் ஏற்ப்பட்டது. பந்தளத்தில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜக-வினருக்கும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் பாஜக-வை சேர்ந்த சந்திரன் உன்னிதான் என்பவர் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்றும் பாஜகவினர் கடைகளை அடைக்கும் படி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, பாஜக-வினர், இந்து அமைப்பினர் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் மாநிலம் முழுவதிலும் பதற்றமான நிலைமை நீடிக்கிறது. கர்நாடகா, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துக்கள் கேரளா எல்லையில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டது.

இன்று முழுஅடைப்பு போராட்டம் காரணமாக, கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம். வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா போலீசார் தெரிவித்தனர். அதையும் மீறி கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்ப்பட்ட வன்முறையில் 40-க்கு அதிகமான போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அதை காட்சிப்படுத்திய பெண் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 100-க்கு அதிகமான பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.

இந்த வன்முறைச் சம்பத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை, அதன் பேரிலேயே கனகதுர்கா(44), பிந்து(42) ஆகியோரை சபரிமலையில் அனுமதித்ததாக தெரிவித்தார்.

இந்தநிலையில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தங்களுக்கு அனுப்ப வேண்டும் என போலீசாருக்கு, மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை கேரளாவில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 266 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் 334 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறையில் இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

Trending News