Omicron: கவனம் தவறினால் நாளொன்றுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், எச்சரிக்கும் நிதி ஆயோக்

வியாழன் அன்று இங்கிலாந்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், இதை மக்கள் தொகை அடிப்படையில் எடுத்துக் கொண்டால், இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப இது 14 லட்சமாக இருக்கக்கூடும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 18, 2021, 08:37 AM IST
Omicron: கவனம் தவறினால் நாளொன்றுக்கு 14 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், எச்சரிக்கும் நிதி ஆயோக்   title=

புதுடெல்லி: கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், இப்போதும் மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், முகக்கவசங்கள் கூட அணிந்துகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர். இப்படி ஒரு மனப்போக்கு இருந்தால், நிலைமை இன்னும் வேகமாக மோசமடையலாம். 
இதற்கிடையில், நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால், பிரிட்டனைப் போல இந்தியாவில் ஓமிக்ரானின் தொற்று பரவல் அதிகரித்தால், ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்தார். ஓமிக்ரான் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் மிகவும் மோசமான சூழலை சந்தித்து வருகின்றன என்றார் அவர். அந்த நாடுகளில், குறைந்த பட்சம் 80 சதவிகிதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொற்றுநோயின் புதிய கட்டம் இது 

வியாழன் அன்று இங்கிலாந்தில் (England) சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், இதை மக்கள் தொகை அடிப்படையில் எடுத்துக் கொண்டால், இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப இது 14 லட்சமாக இருக்கக்கூடும் என்றும் டாக்டர் விகே பால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

ஐரோப்பாவில் கோவிட்-19 (COVID-19) தொற்றுநோயின் ஒரு புதிய கட்டம் தொடங்கியுள்ளதாகவும், அங்கு 80 சதவிகிதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ள நிலையிலும் இந்த அளவு பெரிய அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

மகாராஷ்டிராவில் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால், நாட்டில் ஒட்டுமொத்த நிலைமை சீராக உள்ளது என்றும், எனினும் சில மாவட்டங்களில் தொற்று விகிதம் அதிகரித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். 

ALSO READ | இந்தியாவில் சதமடித்தது ஒமிக்ரான் தொற்று: பரவும் வேகத்தால் அதிகரிக்கும் அச்சம் 

நாட்டில் ஓமிக்ரான் (Omicron) வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களையும் தேவையற்ற இடங்களில் மக்கள் கூடுவதையும் தவிர்க்குமாறு மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 40 பேரும், டெல்லியில் தற்போது 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெரிய பண்டிகை நிகழ்வுகளை தவிர்க்கவும்

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் மேலும் கூறுகையில், கடந்த 20 நாட்களாக தினசரி 10,000 பேருக்கும் குறைவாகவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், பிற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதை மனதில் கொண்டும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். 

மறுபுறம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இயக்குநர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், கொரோனாவின் புதிய மாறுபாடு ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மிக வேகமாக பரவி வருவதால், அத்தியாவசியமற்ற பயணங்கள் மற்றும் கூட்டங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார். மேலும், திருவிழாக்களை பெரிய அளவில் நடத்தக் கூடாது என்றும் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான கோவிட் தொற்று விகிதம் உள்ள மாவட்டங்கள் தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ | Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News