நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியீடு: அ.தி.மு.க!

அ.தி.மு.க. சார்பில் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச கையேடு. இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Last Updated : Mar 24, 2018, 06:19 AM IST
நீட் தேர்வுக்கு இலவச கையேடு வெளியீடு: அ.தி.மு.க! title=

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்த்தில் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு இலவச கையேடுகள் வழங்கப்பட்டன. அம்மா கல்வியகம் (www.kalviyagam.in) என்ற இணையதளத்தில் இந்த புத்தகத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது...! 

‘மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஜெயலலிதா பாடுபட்டார். இதற்காக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். கல்வித்தாயாக ஜெயலலிதா விளங்கினார். தற்போது இந்த அரசும் மாணவர்களுக்காக பாடுபட்டு வருகிறது. பல்வேறு வங்கிகளில், நிறுவனங்களில் வேலையில் சேர உரிய பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியை ஜெயலலிதா கொண்டு வந்தார். இளைஞர்கள் சுய தொழில் தொடங்க நல்ல சூழல் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அம்மா கல்வியகம் மூலம் பிளஸ்-2 மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வரையில் இந்த இணையதளத்தில் 3½ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அதிக மதிப்பெண்களையும் பெற்று உள்ளனர். உயர் படிப்புகளிலும், அரசு தேர்வுகளில் வெற்றி பெறும் வகையிலும் கையேடு வழங்கப்பட்டு இருக்கிறது’ என்றார்.

மாணவர்கள் இந்த கையேடுகளை பதிவிறக்கம் செய்ய அம்மா கல்வியகம் இணையதளத்திற்குள் சென்று அங்கு தங்கள் பற்றிய விவரங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு பாடங்களை அவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜெ.தீபாவின் கணவர் மாதவன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். அவர் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறவே வந்துள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த மாதவன் முதல் மாடிக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.

Trending News