மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை

Reserve Bank of India: ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2024, 11:38 AM IST
  • கடந்த ஆண்டு இருந்த ஈவுத்தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.
  • பட்ஜெட்டை விட அதிகமாக கிடைத்துள்ள ஈவுத்தொகை புதிய அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும்.
  • பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு.
மத்திய அரசுக்கு RBI அளித்த மிகப்பெரிய பரிசு: ரூ.2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை title=

Reserve Bank of India: ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்கும். ஆனால், அரசு அமைவதற்கு முன்னதாகவே இந்திய ரிசர்வ் வங்கி, மத்தியில் ஆட்சிக்கு வரப்போகும் அரசுக்கு ஒரு பெரிய பரிசை அளித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற 608வது இயக்குநர்கள் கூட்டத்தில் ஈவுத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இது, மத்திய வங்கியின் சார்பில் இதுவரை வழங்கப்பட்ட தொகைகளில் அதிகபட்ச ஈவுத்தொகையாக இருக்கும். இது நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இடைக்கால பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களின் மொத்த ஈவுத்தொகை வருமானம் ரூ.1.02 லட்சம் கோடியாக இருக்கும் என அரசாங்கம் மதிப்பிட்டிருந்தது.

கடந்த ஆண்டு இருந்த ஈவுத்தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்போது வழங்கும் இந்த ஈவுத்தொகை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். 2022-23 நிதியாண்டில், ரிசர்வ் வங்கி அரசுக்கு ரூ. 87,416 கோடி ஈவுத்தொகை வழங்கியது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-19 நிதியாண்டில் ரிசர்வ வங்கி ஈவுத்தொகையாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளித்தது. 2023-24ஆம் நிதியாண்டுக்கான உபரி தொகையாக ரூ.2,10,874 கோடியை மத்திய அரசுக்கு வழங்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, அதன் செலவு மற்றும் வருவாயின் வித்தியாசத்தை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.1 சதவீதமாக, அதாவது ரூ.17.34 லட்சம் கோடியாகக் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பட்ஜெட்டை விட அதிகமாக கிடைத்துள்ள ஈவுத்தொகை புதிய அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும்

பட்ஜெட்டை விட அதிக ஈவுத்தொகையைப் பெறுவது அடுத்த மாதம் அமையவுள்ள புதிய அரசாங்கத்திற்கு மிக உதவியாக இருக்கும். திட்டங்களுக்கான செலவினங்களை அதிகரிக்கவும் நிதிப் பற்றாக்குறையை சிறப்பாக நிர்வகிக்கவும் இது உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த வழியில் ஈசியாக செக் செய்யலாம்

ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு இன்னும் பல விஷயங்களை ஆய்வு செய்தது. வளர்ச்சிக் கண்ணோட்டம் மற்றும் உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன் தொடர்புடைய அபாயங்கள் ஆகியவை இதில் அடங்கும். இது தவிர, 2023-24 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய நிதியாண்டுக்கான அதன் ஆண்டறிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆண்டு மற்றும் நிதிநிலை அறிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டன. 
மேக்ரோ பொருளாதார நிலைமைகள் மற்றும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, 2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளுக்கு இடையில் தற்செயல் அபாய இடையகத்தை (CRB) 5.50 சதவீதமாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ (RBI) தெரிவித்துள்ளது. இது வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு

ஆகஸ்ட் 2019 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மூலதனக் கட்டமைப்பின் (ECF) அடிப்படையில் 2023-24 நிதியாண்டில் செலுத்த வேண்டிய டிவிடெண்ட் தொகை (Dividend Amount) குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிமல் ஜலான் தலைமையிலான நிபுணர் குழு ECFஐ பரிந்துரைத்தது. 

ரிசர்வ் வங்கியின் இந்த உபரி பரிமாற்றம் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசாங்கத்தின் வள ஆதாரத்தை அதிகரிக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இது இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிதி ஒருங்கிணைப்பை துரிதப்படுத்த அல்லது செலவினங்களை அதிகரிக்க அனுமதிக்கும்.  மொத்தத்தில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஈவுத்தொகையை அளித்து, ரிசர்வ் வங்கி, உறுதியான பொருளாதார நிலையை அடைய வலுவான ஒரு தொடக்கத்தை அளித்துள்ளது. 

மேலும் படிக்க |  HRA க்ளெய்ம் செய்கிறீர்களா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News