ரிசர்வ் வங்கி அளித்த சூப்பர் செய்தி: இந்த மாதம் முதல் விலைவாசி குறையும்.. காரணம் இதுதான்!!

RBI On Inflation: இந்த மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும். இது சமையலறை பட்ஜெட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2023, 09:16 PM IST
  • சாமானியர்களுக்கு சூப்பர் செய்தி.
  • செப்டம்பர் முதல் பணவீக்கம் குறையும்.
  • உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா.
ரிசர்வ் வங்கி அளித்த சூப்பர் செய்தி: இந்த மாதம் முதல் விலைவாசி குறையும்.. காரணம் இதுதான்!!  title=

சாமானியர்களுக்கு சூப்பர் செய்தி உள்ளது!! விண்ணை முட்டும் பணவீக்கத்தால் அனைத்து விதமான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சமையலறை செலவுகள்தான். காய்கறிகள், எண்ணெய் பிற மளிகை சாமான்கள் என அனைத்து விஷயங்களிலும் விலைவாசி உயர்வால் நெருக்கடி ஏற்படுகின்றது. ஆனால், தற்போது வந்துள்ள ஒரு செய்தி உங்களுக்கு நிம்மதியை அளிக்கலாம். 

இந்த மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும். இது சமையலறை பட்ஜெட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், சில்லறை பணவீக்கம் இந்த மாதத்திலிருந்து குறையத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தக்காளி போன்ற காய்கறிகளின் விலை குறைப்பு மற்றும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் இவ்வாறு கூறினார்.

செப்டம்பர் முதல் பணவீக்கம் குறையும்

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கவர்னர் சக்திகாந்த தாஸ், “செப்டம்பரில் இருந்து சில்லறை பணவீக்கம் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகஸ்ட் மாதத்தில் (சில்லறை) பணவீக்கம் மிக அதிகமாக இருந்தாலும், செப்டம்பர் மாதம் முதல் பணவீக்கம் குறையத் தொடங்கலாம்.ஏற்கனவே தக்காளி விலை குறைந்துள்ளது, இம்மாதம் முதல் மற்ற காய்கறிகளின் சில்லறை விலையும் குறையும்" என்று கூறினார். மக்களுக்கு மலிவு விலையில் தக்காளி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று ஆர்பிஐ கவர்னர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பாக கூறிய அவர், ''பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளது.'' என்றார். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, காய்கறிகள் உள்ளிட்ட முக்கிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறை பணவீக்கம் இந்த ஆண்டு ஜூலையில் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 15 மாதங்களில் இதுவே அதன் அதிகபட்ச அளவாகும். 

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் முக்கிய அப்டேட்: மீண்டும் வருகிறதா OPS? காத்திருக்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள்

இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 4.81 சதவீதமாக இருந்தது. சில்லறை பணவீக்க விகிதத்தை இரண்டு சதவீத மாற்றத்துடன் நான்கு சதவீதமாக வைத்திருக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ஜூலை மாதத்தில் (சில்லறை) பணவீக்க விகிதம் மிக அதிக அளவில் இருந்தது. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஆனால் முக்கியமாக தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விலை உயர்வால் ஜூலை மாதத்தில் விலை அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்." என்று தெரிவித்தார்.

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் இந்தியா

அனைத்து உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்றும் சக்திகாந்த தாஸ் கூறினார். வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் இந்திய வங்கிகள் உறுதியானதாகவும், நிலையானதாகவும் உள்ளன என்று தாஸ் கூறினார். "ஆனால் உள்நாட்டு நிதி அமைப்பு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். கிரெடிட் சூயிஸ் போன்ற பெரிய வங்கியின் தோல்வியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த உலகளாவிய எழுச்சியால் எந்தப் பாதிப்பும் இல்லை. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10 பில்லியனைத் தாண்டியுள்ளது. தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நாட்டில் ஃபீச்சர் போன்கள் மூலம் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்கில் சிக்கல் உள்ள இடங்களிலும் மக்களுக்கு இப்போது பல வசதிகள் கிடைக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் படிக்க | PPF, SSY, பிற சேமிப்பு கணக்குகள் முடக்கப்படலாம்: விதிகளில் அரசு செய்த பெரிய மாற்றம்.. உடனே இதை செய்யுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News