Earthquake in Morocco | 60 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரமான நிலநடுக்கம்.. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலி!

Earthquake in Morocco: ஒரே இரவில் மொராக்கோவை தாக்கிய மோசமான நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 9, 2023, 08:01 PM IST
  • பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்.
  • மொராக்கோ நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் காயம். அதில் ஆபத்தான நிலையில் 721 பேர்
  • இந்த கடினமான நேரத்தில் இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் -பிரதமர்
Earthquake in Morocco | 60 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரமான நிலநடுக்கம்.. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலி! title=

Earthquake News In Tamil: ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களில் மொராக்கோவை தாக்கிய மிக ஆபத்தான நிலநடுக்கம் என்று இந்த பேரழிவு நிலநடுக்கம் விவரிக்கப்படுகிறது. மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11:11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், சில வினாடிகள் நீடித்து 6.8 ரிக்டர் அளவில் முதற்கட்டமாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தீவிரம் 7 ஆக இருந்தது. 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பூகம்பம் மொராக்கோவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை அழித்துவிட்டது, மொராக்கோவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களும் சேதமடைந்துள்ளன

நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது:
மொராக்கோ உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக அதிகரித்துள்ளது. 1,204 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 721 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - ஆழ்கடலில் மர்ம தங்க முட்டை! ஏலியன் முட்டையா? ராக்கெட் பாகமா?

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை வழங்குவதில் சிக்கல்:
மொராக்கோ இராணுவம் மற்றும் அவசரகால சேவைகள் அடிப்படையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட மையப்பகுதியைச் சுற்றியுள்ள மலைப் பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் சேதமடைந்து உள்ளதால், மீட்பு முயற்சிகள் மேற்கொள்வதில் தாமதமாகிறது. போர்வைகள், கட்டில்கள் மற்றும் லைட்டிங் உபகரணங்களுடன் ஏற்றப்பட்ட டிரக்குகள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல முயன்றதாகவும், மலைப்பகுதிகளில்தான் பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்துள்ளதால், நிவாரணம் மற்றும் உதவி அளிப்பதில் கடினமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் MAP தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரிய தளம் சேதம்:
அந்த அறிக்கையில், இந்த நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொராக்கோவின் பழைய நகரமான மராகேஷில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ஜெமா அல்-ஃப்னா சதுக்கத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்:
நிலநடுக்கத்தின் மையப்பகுதியான மராகேஷ் நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். நிலநடுக்கம் தொடர்பான அதிர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க - பாலியல் பலாத்காரம் செய்யவில்லை! 47 ஆண்டு சட்டப்போராட்டத்தில் கிடைத்த நீதி

1960-க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம்:
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, 1960-க்குப் பிறகு மொராக்கோவில் ஏற்பட்டது தான் மிக மோசமான நிலநடுக்கமாகும் எனக் கூறியுள்ளது. 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 12,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 1960 ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட இந்த மோசமான பூகம்பம் உலக வரலாற்றில் மிக தீவிரமானது எனப் பதிவு செய்யப்பட்டது.

அனைத்து உதவிகளுக்கும் இந்தியா தயாராக உள்ளது: பிரதமர் மோடி
மொராக்கோவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளால் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த சோகமான தருணத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோவில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த மக்களுடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது" என்றார்.

மேலும் படிக்க - அதி பயங்கர சர்மட் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா... பீதியில் NATO நாடுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News