தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டும் தான் - ஆளுநர் ரவி பேச்சு

Governor RN Ravi: ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 23, 2023, 05:23 PM IST
  • இப்போது பகவத் கீதையும், திருக்குறளும் என் உற்ற தோழன் - ஆளுநர்.
  • இலக்கியங்களை தமிழிலேயே படித்தால் தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும் - ஆளுநர்.
  • தமிழ் கற்றுக்கொள்வதை என் வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன் - ஆளுநர்.
தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டும் தான் - ஆளுநர் ரவி பேச்சு title=

RN Ravi On Tamil And Sanskrit: தமிழ்நாடு ஆளுநரின் 'எண்ணித் துணிக' தொடரின் 10ஆவது நிகழ்ச்சியான தமிழ் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (செப். 23) நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பகவத் கீதையும், திருக்குறளும் எனக்கு...

பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்நிகழ்வில், தமிழ் மொழி இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பின் நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர்,"நான் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு, எனக்கு தமிழ் இலக்கியம் பற்றியும், மொழி பற்றியும் பெரியளவில் ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழ் மொழி இலக்கியச் செறிவு மிகுந்தது. திருக்குறள் பற்றி தெரிந்திருந்தாலும், மற்றபடி ஒன்றும் தெரியாது. 

திருக்குறளை ஆங்கிலத்தில் நான் படிக்கத் தொடங்கியபின், அதனுடன் தீவிரக் காதல் வயப்பட்டேன். நான் 5ஆவது படிக்கும்போது என் அப்பா பகவத் கீதையை கொடுத்து படிக்கச் சொன்னார். அப்போதில் இருந்து பகவத் கீதை தான் எனக்கு உற்ற தோழனாக இருந்தது. ஆனால், இப்போது திருக்குறளோடு சேர்த்து இரண்டு புத்தகங்கள் என உற்ற தோழனாக உள்ளன.

மேலும் படிக்க | மத்திய அரசுக்கு சென்னை மேயர் பிரியா பாராட்டு

தமிழ் மொழியின் சிறப்பு

திருக்குறளை ஆங்கிலத்தில் படித்தபோது, அதன் விளக்கங்கள் மிக ஆழமானதாக இல்லாததால், சரியாக மொழிப்பெயர்ப்பு செய்யப்படவில்லையோ என நினைத்தேன். ஆனால், திருக்குறள் எளிதில் புரியக் கூடிய ஒன்றாக இருப்பதை நான் அறிந்தேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் சமஸ்கிருதத்தை பார்த்தேன். அப்போது அக உணர்வு, மெய்யுணர்வு ஆகியவற்றை பற்றி திருக்குறள் பேசியிருப்பதை உணர்ந்தேன். 

பதிணென்கீழ்கணக்கு நூல்களை படித்தபோது நான் வியந்தேன். மொழி தான் மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ஆங்கில மொழிப்பெயர்ப்பை பார்க்கும்போது, ஆங்கிலம் சமீபத்தில் உருவான நாகரீகம். ஆனால், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான திருக்குறள், புதிதாக உருவான நாகரீகத்துடனும தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது என்றால் அதுதான் நம் தமிழ் மொழியின் சிறப்பு. 

சமஸ்கிருதம் மட்டும்...

ஒரு உயிர் பாதிக்கப்படும்போது நமக்கு ஏற்படும் வலி தான் இந்த உலகத்துடன் நமக்கான தொடர்பை குறிக்கிறது. ஏதோவொரு விலங்கு, செடி, கொடிகள் பாதிக்கப்பட்டாலும் நமக்கு வலிக்கிறது என்றால் அதுதானே இந்த உலகத்தின் நியதியாக இருக்கிறது. வள்ளலார் இதனைத்தான் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடினார். எனவே தான், ஐரோப்பிய மொழிகளால் தமிழுடன் வரவே முடியாது. இந்திய மொழிகளில் கூட சமஸ்கிருதம் மட்டும் தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடிய தன்மை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்

'செந்தமிழும் நாப்பழக்கம்'

காஷ்மீர் முதல் வடகிழக்கு நாடுகள் வரை நான் பணியில் இருந்திருக்கிறேன். அதற்காக 24 மணிநேரமும் நான் கெட்டவர்களுடன் சண்டையிட்டேன் என சொல்லமுடியாது. எனக்குக் கிடைத்த நேரத்தில் நான் நம் நாடு, மொழிக்காக என்ன செய்வதென சிந்தித்தேன். முதுமொழிக் காஞ்சியில் உள்ள அனைத்து பாடல்களும், இந்த உலகம் முழுமைக்கும் உள்ள மனிதர்கள் அனைவருக்குமாக எழுதப்பட்டவை.

தமிழ் மொழி இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பதால் பெருமை இல்லை. தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியின் செறிவை தமிழ் மொழியிலேயே படித்தால் தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என சொல்வது போல எதுவுமே சிரமமில்லை என்பதை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தமிழ் பயிலும் மக்கள் நிரூபித்துள்ளனர். 

மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு வேண்டுகோள்

தமிழ் மொழி இலக்கியங்களை மற்ற மொழிகளுக்கு மொழிப்பெயர்ப்பு செய்கிறவர்கள் அவர்களுக்காக மட்டும் இதனை செய்யவில்லை. தமிழில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்வதன் மூலம் அந்த மொழிக்கும், மக்களுக்கும், மொத்த மனிதத்துக்கும் உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம். மொழி பெயருக்கும் போது அதன் கருத்துகள் விரிவாக விளக்குங்கள். திருக்குறளை திருவள்ளுவர் பெருங்கடலை வாளியில் அடக்குவது போல் செய்துள்ளார். அது அவரால் மட்டுமே சாத்தியம். நாம் அதனை விரிவாக தான் விளக்க வேண்டும் என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்து மொழி பெயர்க்க வேண்டும்.

நான் ஆளுனரோ இல்லையோ, தமிழ் மொழியை முழுவதுமாக கற்றுக்கொள்வதை என் வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன். தத்தி நடக்கும் குழந்தை போல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம்" என்றார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் அறிவு களஞ்சியம் என்று விருதினை முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார். 

மேலும் படிக்க | அமித்ஷாவிடம் சொல்ல செல்லூர் ராஜூவுக்கு தைரியம் இருக்கிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News