சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கள் மொழிமாற்றம் செய்யும் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம்!!

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மொழிமாற்றம் செய்யும் பட்டியலில் தமிழ் மொழி இடம் பெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 3, 2019, 06:31 PM IST
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கள் மொழிமாற்றம் செய்யும் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம்!! title=

புதுடெல்லி: உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மொழிமாற்றம் செய்யும் பட்டியலில் தமிழ் மொழி இடம் பெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சுப்ரீம்கோர்ட் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் தான் இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி ஆங்கிலத்தோடு, இந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் தீர்ப்பு விபரங்கள் வெளியிடும் பணி துவங்கப்படும் எனவும், மேலும் பல பிராந்திய மொழிகளிலும் தீர்ப்புக்களை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும், மறுபுறம் செம்மொழி என அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் மொழியை, தீர்ப்பை மொழிமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் புறக்கணிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது. பல தமிழக அரசியல் கட்சிகள் தமிழ் மொழியையும் மொழிமாற்றம் செய்யும் பட்டியலில் இடம் பெறச்செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

மேலும் தென்மாநிலங்களை பொருத்த வரை கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் இருந்து தான் அதிக வழக்குகள் உச்ச மன்றத்துக்கு செல்கிறது. ஆனால் வழக்கை மொழிமாற்றம் செய்யும் விவகாரத்தில் தமிழ் மொழி இல்லை என்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பபை மொழிமாற்றம் செய்யும் பிராந்திய மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெறும் எனத்தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட மொழிகள் பட்டியல் வெளியிடும் போது  தமிழ் மொழியும் கண்டிப்பாக இடம்பெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Trending News