செந்தில் பாலாஜியின் தம்பி கைது இல்லை - அமலாக்கத்துறை

Sethil Balaji Borther ED: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 14, 2023, 03:46 PM IST
  • கேரளாவில் அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
  • தற்போது அசோக்குமார் கைது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • அவர் கைதா இல்லையா என்பதன் குழப்பம் தற்போது நீடிக்கிறது.
செந்தில் பாலாஜியின் தம்பி கைது இல்லை - அமலாக்கத்துறை  title=

Sethil Balaji Borther ED: சட்டவிரோத பணமோசடி தடைசட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பிருந்தே செந்தில் பாலாஜிக்கு தொடர்பான கரூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் பல நாள்களாக சோதனையில் ஈடுப்பட்டனர். 

மேலும், சோதனையின் அடிப்படையில் இதுவரை எவ்வளவு தொகை அல்லது ஆவணங்கள் சிக்கியுள்ளன என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அந்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பரிசோதனை ரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

புழலில் செந்தில் பாலாஜி

சிகிச்சையில் இருந்த அவர் சற்று குணமடைந்த நிலையில், அவரை புழல் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மாற்றினர். இருப்பினும், அவர் நீதிமன்ற காவலில் இருந்தார். அந்த சூழலில், கடந்த ஆக. 7ஆம்  தேதி அவரை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்ததை அடுத்து, சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஆக. 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். 

இதையடுத்து, அவரை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரிடம் பல மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கடந்த ஆக. 12ஆம் தேதி செந்தில் பாலாஜியின் காவல் நிறைவடைந்த நிலையில், அவரை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். 

மேலும் படிக்க | நீட் தேர்வு: ஆளுநர் மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் - உதயநிதி ஸ்டாலின்

அடுத்த குறி அசோக்குமாருக்கு...?

விசாரணையில் தன்னை அதிகாரிகள் துன்புறுத்தவில்லை என செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் பதில் அளித்தார். தொடர்ந்து, அவரை வரும் ஆக. 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்க குற்ற பத்திரிகை கொண்ட 3000 பக்க ஆதார ஆவணங்கள் டிரங்க் பெட்டியில், அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 

தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுஒருபுறம் இருக்க, அமலாக்கத்துறையன் அடுத்த குறி செந்தில் பாலாஜியின் தம்பியான அசோக்குமார் என அரசியல் வல்லுநர்கள் கிசுகிசுத்தனர். 

நீடிக்கும் குழப்பம்

அந்த வகையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, நான்கு முறை அமலாக்கத்துறை சார்பில் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. மேலும், லுக் அவுட் நோட்டீசும் விடுக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன் அசோக்குமாரின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. அதில், கரூரில் 2.49 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அசோக்குமாரின் மாமியார் செந்தில் பாலாஜியின் பினாமியாக வாங்கியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் நேற்று கொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியன. இருப்பினும், அமலாக்கத்துறை சார்பில் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், அசோக்குமார் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான அறிக்கையோ அல்லது தகவலோ அமலாக்கத்துறை தரப்பில் வெளயிடப்படவில்லை. இதனால், அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்த குழப்பம் தற்போதும் நீடிக்கிறது. 

மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் ஸ்டாலின்... உச்சமடையும் நீட் விவகாரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News