செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி... காவலில் எடுக்க உத்தரவு - நீதிபதி அதிரடி!

Senthil Balaji On Custody: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 16, 2023, 08:16 PM IST
  • மருத்துவமனையிலேயே விசாரணை மேற்கொள்ள உத்தரவு.
  • விசாரணையில் ஏதும் அசௌகரியம் ஏற்பட்டால், செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம்.
  • 8 நாள்கள் காவலில் இருக்க உத்தரவு.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி... காவலில் எடுக்க உத்தரவு - நீதிபதி அதிரடி! title=

Senthil Balaji Case Update: சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்தது. ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தாகல் செய்த மனுவில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் செந்தில்பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் அமலாக்கப் பிரிவு மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பாக இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன. அமலாக்கப் பிரிவு காவல் கோரும் மனுவின் விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டபோது, காவலில் செல்ல விருப்பமா என கேட்கப்பட்டது. அதற்கு, விருப்பமில்லை என செந்தில்பாலாஜி பதிலளித்தார்.

புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத்துறையின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் நடைபெற்ற வாதங்களின் போது, வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி விவகாரம்: சவுக்கு சங்கர் போட்ட ட்வீட்... ரூ. 1 லட்சம் அபராதம்

செந்தில் பாலாஜி 19 மணிநேர விசாரணைக்கு பிறகே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனால் அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் வாதிடப்பட்டது. மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு இடக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. மேலும் இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் தெரிவிக்கப்பட்டது. 

8 நாள்கள் காவல்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, தீர்ப்பிற்காக வழக்கை இன்று தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி அல்லி இன்று மாலை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 15 நாட்கள் அமலாக்கத்துறையினர் காவல் கோரிய மனுவில், செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

சிகிச்சையை தொடரலாம்

இன்று முதல் 23ஆம் தேதி மாலை 3 மணி வரை காலில் வைத்து விசாரித்துவிட்டு, அன்றைய தினம் மீண்டும் காணொளி மூலம் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையிலே விசாரிக்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும் சிகிச்சையை தொடர்ந்து காவேரி மருத்துவமனை வழங்கலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்க பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதி உத்தரவை கேட்ட செந்தில் பாலாஜி தனது உடல்நிலை சரியில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் நீதிமன்ற காவலில் அனுப்பக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.

உடல்நிலை பாதிக்கும்

பின்னர் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதித்ததையும் நீதிபதி கவனத்திற்கு கொண்டு வந்தனர். மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

அசௌகரியும் ஏதும் ஏற்பட்டால்...

ஆனால் நீதிபதி அதற்காக தான் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்திருப்பதாகவும், உத்தரவுகளை முழுமையாக படித்துவிட்டு உரிய நிவாரணத்தை தேடும்படியும் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையில் அசௌகரியும் ஏதும் ஏற்பட்டால் செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இலக்கா மாற்ற பரிந்துரை ஏற்பு... ஆனாலும் செந்தில் பாலாஜிக்கு ஆளுநர் ஆப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News