ஓய்ந்தது பிரச்சாரம்.. 46,639 பதவிகளுக்கு நாளை மறுநாள் 2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 28, 2019, 06:08 PM IST
ஓய்ந்தது பிரச்சாரம்.. 46,639 பதவிகளுக்கு நாளை மறுநாள் 2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் title=

சென்னை: 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான முதல்கட்டத் தேர்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப் பதிவு கடந்த 27 ஆம் தேதி முடிந்தது. முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து நாளை மறுநாள் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 46,639 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 

அதில் 38,916 கிராம ஊராட்சி  வார்டு உறுப்பினர் பதவிக்கும், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

நாளை மறுநாள் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்தக் கட்ட தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும். 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கும் மட்டுமே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று (முதல் கட்ட தேர்தல்) நடைபெற்றது. இதில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது அவருக்கு "ஸ்பேனர்" சின்னத்திற்கு பதில் "ஸ்குரூ" சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து சேகர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான உமா மகேஸ்வரியிடம் புகார் செய்தார்.

இதையடுத்து விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் 30 ஆம் தேதி 2-ஆம் கட்ட தேர்தலின் போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்:

> தமிழக தேர்தல் ஆணையம் 2019 உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பு அறிவிப்பை 2019 டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிடும்.

> தமிழக ஊரக அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13, 2019 அன்று முடிவடைந்தது. 

> வேட்புமனுக்கள் டிசம்பர் 16, 2019 அன்று பரிசீலிக்கப்பட்டது.

> வேட்புமனுக்கள் வாபஸ் பெற்ற கடைசி நாள் 2019 டிசம்பர் 18

> முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது.  

> இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

> வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News