‘எங்க படகு ஏலம்போய், எங்க கிட்டயே இரும்பா வருது’ - தமிழக மீனவர்கள் கண்ணீர்

தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கே இரும்புகளாக வரும் துயரம்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 8, 2022, 03:24 PM IST
  • சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்
  • துண்டுதுண்டாக உடைக்கப்பட்டு விறகு, இரும்பாக்கி விற்பனை
  • பொறுத்துக்கொள்ளவே முடியாத வேதனை என தமிழக மீனவர்கள் கண்ணீர்
‘எங்க படகு ஏலம்போய், எங்க கிட்டயே இரும்பா வருது’ - தமிழக மீனவர்கள் கண்ணீர் title=

கச்சத்தீவில் மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை சேதப்படுத்துவதும், மீனவர்களை சிறைப்பிடித்துக் கொண்டுப் போவதும் என நாள்தோறும் மீனவர்கள் வாழ்வு துயரத்துக்குரியதாக உள்ளது. இதற்காக தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை நாடும் நிலையே மீனவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அச்சத்துடனேயே சென்றுவரும் சூழல் நிலவி வருகிறது. சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மாநில அரசின் கடிதங்கள் மூலமும், சில சமயமும் ஒரு மாத காலம் தண்டனைக் காலம் முடிந்தபின்னும் தாயகம் திரும்புகின்றனர். தமிழ்நாட்டிற்கு பத்திரமாக வரும் மீனவர்கள் மகிழ்ச்சியாக தங்களது விடுதலையை உணர்வதில்லை. 

மேலும் படிக்க | Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

காரணம், சிறைபிடிக்கப்படும் போது இலங்கை கடற்படையினர் மீனவர்களோடு படகுகளையும் சிறைபிடிக்கின்றனர். மீனவர்களை விடுதலை செய்யும் அந்நாட்டு நீதிமன்றம் படகுகளை வைத்துக்கொள்கிறது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட  தமிழக மீனவர்களின் 130 விசைப்படகுகள் பயன்படுத்த முடியாத நிலையில் அங்கேயே வெகுநாட்களாக கிடக்கின்றன. இதனால் பயன்படுத்தவே முடியாத நிலைக்கு தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் பாழாகின்றன. இந்த படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதால், தமிழக மீனவர்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் யாழ்ப்பாணத்திலுள்ள பொம்மை வெளி கடற்கரையில்  திறந்தவெளியில்  இயங்கி வரும் பட்டறைக்கு  இரும்பாக பிரித்தெடுக்கப்படும் பணிக்கு அனுப்பப்படுகிறது. பல லட்சம் மதிப்பிலான படகுகள் அங்கு உடைக்கப்பட்டு  இரும்பு மற்றும் பலகைகளாக பிரித்தெடுக்கப்படுகின்றன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள  சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக படகுகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட மரப்பலகைகள் விறகுகளாக  விற்கப்படுகின்றன. தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ விறகு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படகிலிருந்து பிரிக்கப்படும் ஆங்கர், சங்கிலி  உள்ளிட்ட உலோக பொருட்களும் தனித்தனியாக விற்பனை செய்யப்படுகின்றன. இதன் இரும்புகள் இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த தமிழக மீனவர்கள்! தொழில்போட்டியால் குறையும் மீனவர்களின் ஒற்றுமை!

லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட தங்களது மீன்பிடி படகுகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டு, இரும்பாகவும்  விறகாகவும்  விற்பனை செய்யப்படுவது தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு படகை  உருவாக்க 40 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் வரை இந்திய மதிப்பில் செலவாகும் என மீனவர்கள் புலம்புகின்றனர். இந்தக் படகுகளில்  முதலீடு செய்ய  தமிழக மீனவர்களில் பலர் வங்கிகளில் கடன் பெற்று படகுகளை வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது அவை உலோகங்கள் ஆக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை மீனவர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர். 

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு  அங்கேயே பல ஆண்டுகளாக கடலிலேயே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டதால் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளான இந்த படகுகளை மத்திய மாநில அரசுகள் தலையிட்டு படகுகளை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தி இருந்தால் இந்த மிகப் பெரிய சேதத்தையும் நஷ்டத்தையும்  ஏற்படாமல் தடுத்திருக்க முடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் இலங்கையில் ஏலம் விடப்பட்ட தங்களது விசைப்படகுகள் உடைக்கப்பட்டு இரும்புகளாக இந்தியாவுக்கே வருவது மிகவும் அவமானத்துக்குரிய செயல் என்றும் மீனவர்கள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், இச்சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் எஞ்சியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | மீனவ குடும்பங்களுக்கு ரூ.5,000 வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News